உக்ரைனில் பொம்மை அரசை நிறுவினால் இது தான் கதி! ரஷ்யாவுக்கு பிரித்தானியா பகிரங்க எச்சரிக்கை
உக்ரைனில் பொம்மை அரசை நிறுவினால் கடும் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை அன்று பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய ஆதரவு தலைவரை உக்ரைனில் ஆட்சியில் அமர்த்த புடின் அரசாங்கம் முயல்வதாக குற்றம்சாட்டியது.
அதாவது, ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைனின் முன்னாள் எம்.பி Yevhen Murayev-வை தலைமை பதவியில் அமர்த்த ரஷ்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.
மேலும், ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் பல முன்னாள் உக்ரேனிய அரசியல்வாதிகளுடன் படையெடுப்புக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக தொடர்பு கொண்டதாகவும் பிரித்தானியா கூறியது.
எனினும், இது தவறான தகவல் என நிராகரித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரித்தானியா மற்றும் நேட்டோ உக்ரைன் மீதான பதட்டங்களை அதிகரிக்கிறது என்று குற்றம் சாட்டியது.
அதேசமயம் ஜனாதிபதி அலுவலகத்தின் உக்ரைன் ஆலோசகர் Mykhailo Podolyak, பிரித்தானியா குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தனியார் ஊடகம் நேர்காணலில் பேசிய பிரித்தானியா துணை பிரதமர் டொமினிக் ராப், ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்து ஆக்கிரமித்து, உக்ரைனில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவினால் மிகவும் கடுமையான விளைவுகள் சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.