பிரான்சில் மோசடியில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்த பிரித்தானியப் பெண்
பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியப் பெண்ணொருவர் வங்கி மோசடி ஒன்றில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்துள்ளார்.
தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகரில் வாழ்ந்துவருபவர் பிரித்தானியரான Deirdre Rankin (79).
2025ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைத்தவர் தான் Deirdreயின் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறியுள்ளார்.
பறிபோன 4,000 யூரோக்கள்
Deirdreயின் வங்கிக்கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதாகவும், உடனடியாக அவரது வங்கிக்கணக்கை காப்பாற்றிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த நபர்.

அதாவது, Deirdreயின் வங்கிக்கணக்கிலிருக்கும் பணத்தைக் காப்பாற்றவேண்டுமானால், அதை உடனடியாக வேறு கணக்குக்கு மாற்றவேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.
அப்படியே Deirdre செய்ய, பிறகு புதிய கணக்கை சோதித்துப் பார்த்தால், அதில் பணம் எதுவும் இல்லை. அந்த நபர் அந்த கணக்கிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு வங்கிக்கணக்கை மூடிவிட்டார்.
அவ்வளவுதான் Deirdreயின் வங்கிக்கணக்கிலிருந்த 4,000 யூரோக்கள் மாயமாகிவிட்டன.
Deirdre இந்த விடயம் தொடர்பில் புகாரளிக்க, 300 யூரோக்களை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளது வங்கி.
விடயம் என்னவென்றால், பிரான்சைப் பொருத்தவரை, வாடிக்கையாளர்கள் மோசடி மூலம் இழந்த பணத்தை வங்கி திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்கிற அவசியம் இல்லை.
2025ஆம் ஆண்டு, இதேபோன்றதொரு மோசடி வழக்கில், ஏமாந்த வாடிக்கையாளருக்கு வங்கி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துவிட்டது.
மின்னஞ்சல் ஒன்றை நம்பி அந்த நபர் பணத்தை இழந்த நிலையில், அது மோசடி என தெளிவாக புரிய வாய்ப்பிருந்தும் வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் அலட்சியமாக இருந்ததாலேயே அவர் தன் பணத்தை இழந்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறிவிட்டது.
ஆக, யாராவது தொலைபேசியில் அழைத்து வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி, உங்கள் பாஸ்வேர்ட் போன்ற விடயங்களைக் கேட்டால், உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்துவிடுங்கள் என்று கூறியுள்ள அதிகாரிகள், அப்படி ஏதாவது முக்கிய தகவல்களை நீங்கள் பகிர்ந்துவிட்டதாக கருதினால் உடனடியாக உங்கள் வங்கியை அணுகி நடந்ததைத் தெரியப்படுத்துங்கள் என்றும் கூறுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |