ஜேர்மனிக்கான உக்ரைன் தூதர் திடீரென பணிநீக்கம்: காரணம் என்ன?
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ஜேர்மனிக்கான உக்ரைன் தூதரை திடீரென பணிநீக்கம் செய்துள்ளார்.
எதற்காக அவர் பணிநீக்கம் செய்யப்படுகிறார் என்பதற்கான காரணம் எதையும் கூறாமலே, திடீரென ஜேர்மனிக்கான உக்ரைன் தூதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தூதருக்கு வேறு ஏதேனும் பொறுப்பு கொடுக்கப்படுமா என்பது குறித்து இப்போதைக்கு தகவல் எதுவும் தெரியவில்லை.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, சர்வதேச நாடுகளின் உதவியையும், இராணுவ உதவியையும் பெற வேகமாக செயல்படுமாறு தனது தூதர்களை ஜெலன்ஸ்கி துரிதப்படுத்திவந்த நிலையில், அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகியுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவிடம் ஜேர்மனி எரிவாயு வாங்கும் பிரச்சினையும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
அதாவது, ஜேர்மனிக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்குவதை திடீரென ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom குறைத்துக்கொண்டது. தனது எரிவாயு வழங்கும் அமைப்பிலுள்ள கருவி ஒன்று பழுதாகிவிட்டதாகவும், அதை சரி செய்வதற்காக கனடாவுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த கருவியை ரஷ்யாவுக்கு திருப்பிக் கொடுக்க இயலாது என்று கனடா கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்தக் கருவியை ரஷ்யாவிடம் ஒப்படைக்குமாறு ஜேர்மனி கனடாவை வற்புறுத்துகிறது. உக்ரைனோ, அதை ரஷ்யாவுக்குக் கொடுக்ககூடாது என கனடாவை வலியுறுத்துகிறது. அப்படி கனடா அந்தக் கருவியை ரஷ்யாவிடம் ஒப்படைக்குமானால், அது மாஸ்கோ மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும் செயலாகும் என்கிறது உக்ரைன்.
ஆக, இரு நாடுகளுக்குமிடையில் உரசல் உருவாகியுள்ள நிலையில், ஜேர்மனி மீதான தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக உக்ரைன், ஜேர்மனிக்கான தனது தூதரை பணிநீக்கம் செய்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.