ரஷ்ய ஏவுகணைக்கு தப்பிய உக்ரேனிய தாயார்... பிரித்தானியாவில் கிடைத்த மறக்க முடியாத பரிசு
பதுங்கு குழி ஒன்றில் பிள்ளை பெற்றெடுக்க விரும்பாததால் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்ததாக லீனா
ஒரு மாத காலம் நீண்ட புச்சா நகர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோரை ரஷ்யர்கள் கொன்று தள்ளியுள்ளனர்
உக்ரைனின் புச்சா நகர படுகொலைகளில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய கர்ப்பிணியான அகதி ஒருவர் பிரித்தானியாவில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உக்ரேனின் புச்சா நகரில் ரஷ்ய துருப்புகள் கொடூர தக்குதலை முன்னெடுத்தது. ஒரே நாளில் பலர் கொல்லப்பட்டனர். நகருக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள் குடியிருப்புகளையும் கட்டிடங்களையும் மொத்தமாக சிதைத்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். அதில் ஒருவர் கர்ப்பிணியான 37 வயது லீனா குலாகோவ்ஸ்கா. 36 வார கர்ப்பிணியாக இருந்த அவர் ஜூன் மாதம் நாட்டைவிட்டு வெளியேறினார்.
@APEX
இந்த நிலையில், இவரது குழந்தை நிக்கோல் கடந்த மாதம் பிளைமவுத் மருத்துவமனையில் பிறந்தார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள் படையெடுப்பை முன்னெடுத்தது.
போர் முடிவுக்கு வரும் என ஜூன் மாதம் வரையில் காத்திருந்ததாகவும், பதுங்கு குழி ஒன்றில் தாம் பிள்ளை பெற்றெடுக்க விரும்பாத காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் லீனா குலாகோவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.
18ல் இருந்து 60 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான ஆண்கள் எவரும் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால், 39 வயதான தமது கணவர் உக்ரேனில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் லீனா குலாகோவ்ஸ்கா, தமது இரு பிள்ளைகளுடன் பிரித்தானியாவுக்கு புறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
@APEX
தற்போது, பிரித்தானியாவில் இருந்து எங்கும் செல்ல தாம் தயாராக இல்லை எனவும், போர் முடிவுக்கு வந்த பின்னர், எதிர்காலம் பிரித்தானியாவிலா அல்லது உக்ரேனிலா என்பது முடிவெடுக்கப்படும் என்றார்.
ஒரு மாத காலம் நீண்ட புச்சா நகர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோரை ரஷ்யர்கள் கொன்று தள்ளியுள்ளனர். அப்பாவி மக்களின் சடலங்கள் வீதிகளில் காணப்பட்டதுடன், புதைக்கப்பட்ட நிலையிலும் கொத்தாக சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
சர்வதேச கவனத்தை ஈர்த்த புச்சா நகர படுகொலை தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.