அத்தியாவசிய உணவுப் பொருட்கள்... மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் தவிப்பு
பிரித்தானியாவில் லொறி சாரதி பற்றாக்குறை காரணமாக எழுந்துள்ள நெருக்கடியால், மக்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக்குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவலின்படி, இந்த நெருக்கடியான சூழலில் 6 பிரித்தானியர்களில் ஒருவர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அங்காடிகளில் இறைச்சி, பழங்கள், உறைவித்த உணவுகள் என அனைத்தும் விற்றுத்தீர்ந்துள்ளன. நாட்டின் பெரும்பாலான அங்காடிகளில் இருந்து மக்கள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் கழிப்பறை ரோல்களையே அதிகமாக வாங்கிச் செல்வதும் காணப்படுகிறது.
லொறி சாரதிகள் பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் ஒருபக்கம் நடவடிக்கை முன்னெடுத்து வந்தாலும், உணவுப்பொருள் தட்டுப்பாடானது கிறிஸ்துமஸ் பண்டிகையை பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, எரிபொள் தட்டுப்பாடும் விலை உயர்வும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் ராணுவம் களமிறங்கியுள்ளது.
மேலும் கனரக சாரதிகளுக்கான பயிற்சியில் 3,000 பேர்களுக்கு வாய்ப்பிருப்பதாகவும் மொத்தம் 5,000 சாரதிகளை உடனடியாக பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.