குழந்தையின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல் - கருவிலே அறுவை சிகிச்சை
கருவில் உள்ள குழந்தையின் வயிற்றின் வெளியே குடல் வளர்ந்த பாதிப்பிற்கு, அந்த கரு வெளியே வரும் முன்னே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருவின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல்
லண்டனைச் சேர்ந்த மெய்ஸி சாவேஜ் என்ற கர்ப்பிணி பெண், அவரது 20வது வார ஸ்கேன் பரிசோதனையின் போது, கருப்பையில் உள்ள குழந்தைக்கு காஸ்ட்ரோஸ்கிசிஸ் என்னும் வயிற்றுக்கு வெளியே குடல் வளரும் அரிய குறைபாடு இருந்ததை கண்டறிந்தனர்.

குழந்தைக்கு தீவிர காஸ்ட்ரோஸ்கிசிஸ் உள்ளதால் கருவில் இருக்கும் போதே அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதனையடுத்து, ஹூஸ்டனில் உள்ள ஸ்பைனா பிஃபிடா குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கரு அறுவை சிகிச்சையில் அனுபவமுள்ள மருத்துவர் மைக்கேல் பெல்ஃபோர்ட் தலைமையிலான குழு மூலம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்குப்பட்டது.

அதற்கு முன்னதாக பெல்ஜியத்தில் உள்ள லூவன் மருத்துவமனையில் தசைகளைத் தளர்த்தி, காயம் வெற்றிகரமாகக் குணமடைவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றுச் சுவரில் போடோக்ஸ் ஊசியைச் செலுத்தினர்.
26வது வார கர்ப்ப காலத்தில் மெய்சிக்கு இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மெய்சியின் கருப்பை பகுதியளவு திறக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான இடத்தை விரிவுபடுத்துவதற்காக, பனிக்குட நீர் வெளியேற்றப்பட்டு அதற்குப் பதிலாக கார்பன் டை ஆக்சைடு(CO2) வாயு செலுத்தப்பட்டது.

கீஹோல் அறுவை சிகிச்சை மூலம் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் மெதுவாக அதனது வயிற்றுக்குள் மீண்டும் தள்ளப்பட்டு, தையல் போடப்பட்டது.
இதன் காரணமாக குழந்தை வெளியே வர இன்னும் 14 வாரங்கள் இருந்த நிலையில், மெய்சிக்கு சிசேரியன் தழும்பின் அளவை விட 2 மடங்கு பெரிய ஒரு தழும்பு ஏற்பட்டது. அவ்வபோது அந்த குழந்தை தழும்பை உதைத்து வலியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் டெக்சாஸில் வைத்து சுகப்பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சிகிச்சை முறையால் பயனடைந்த முதல் பிரித்தானிய குழந்தை இதுவாகும். மேலும் உலகளவில் பயனடைந்த மூன்றாவது குழந்தை ஆகும். இந்த குழந்தைக்கு தியோ என பெயரிட்டுள்ளனர்.
கடுமையான வயிற்றுப் பிளவு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு வழக்கமாகத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சையை விட, இந்த குழந்தைக்கு மிகக் குறைவான சிகிச்சையே தேவைப்பட்டது.
குழந்தை நன்றாகக் குணமடைந்ததாகவும், பிறந்த உடனேயே இயல்பாகப் பால் குடிக்கத் தொடங்கியதாகவும், சில நாட்களிலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காஸ்ட்ரோஸ்கிசிஸ் எனப்படும் இந்தக் கடுமையான பிறவிக் குறைபாடு, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 குழந்தைகளில் ஒருவரைப் பாதிக்கிறது.
குழந்தைகளுக்கு வாரக்கணக்கில் தீவிர சிகிச்சைப் பிரிவும், குழாய் அல்லது சிரைவழி ஊட்டச்சத்து உணவூட்டமும், சரிசெய்யும் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். தியோவின் நிலைமை போன்ற மிகவும் சிக்கலான நேர்வுகளில், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
இதன் காரணமாக, 6 மாதங்கள் வரை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்குதல், பல அறுவை சிகிச்சைகள், 2 ஆண்டுகள் வரை நரம்பு வழி ஊட்டச்சத்து அளித்தல் மற்றும் குடல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
மிக உயர்ந்த தரத்திலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும், 10 குழந்தைகளில் ஒன்று உயிரிழக்க நேரிடுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |