பிரித்தானியாவின் 'சிவப்பு பட்டியலில்' இந்தியா சேர்க்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவின் 'சிவப்பு பட்டியலில்' இந்தியா சேர்க்கப்படுமாக என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய இரட்டை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானியாவில் அதிகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் இந்த புதிய வைரஸால் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு பயணித்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் அவர்கள் எப்படி இந்திய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இந்த புதிய இரட்டை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தோன்றியதையடுத்து, இரண்டாவது அலை தலைதூக்கியதால் தற்போது தொற்று எண்ணிக்கை ஓவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் இந்த வைரஸ் தற்போது பிரித்தானியாவிலும் பரவ ஆரம்பித்துவிட்டதால், இந்த இந்திய வகை 'Double Mutant' கொரோனா வைரஸின் வீரியம், பரவும் தன்மை, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என்பது குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரித்தானியாவின் பயண 'சிவப்பு பட்டியலில்' இந்தியா சேர்க்கப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் (Susan Hopkins) கூறியுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை 1,882 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டத்திலிருந்து பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளது. இதனால், அந்நாட்டு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.