பிரித்தானியாவின் அதிர்ஷ்டமில்லாத தம்பதி! லொட்டரியில் 83 கோடி பரிசு விழுந்தும் கோட்டை விட்ட ஜோடி... தலைசுற்றவைக்கும் பின்னணி
பிரித்தானியாவில் லொட்டரியில் ரூ 83 கோடியை ஜெயித்தும் அந்த பணத்தை பெற முடியாமல் துரதிஷ்டவசமான ஜோடி என அழைக்கப்பட்ட தம்பதி தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 20 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். மார்டின் டோட் - கே தம்பதி கடந்த 2001ஆம் ஆண்டு பிரித்தானிய தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்கள். இதற்கு காரணம் உண்டு, இருவரும் வாரா வாரம் லொட்டரி சீட்டு வாங்கி தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என ஏங்கியது உண்டு.
இந்த நிலையில் கேமிலோட் என்ற லொட்டரி நிறுவனம் அப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தொடர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபவர்பவர்கள் தங்களின் வழக்கமான எண்களைப் பயன்படுத்தி பரிசுகளை பெறலாம் என அறிவித்தது. இதில் ஆச்சரியமாக டோட் - கே தம்பதியின் அனைத்து எண்களும் £3 மில்லியன் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 83,41,71,938.10) பரிசுக்கு தகுதி பெற்று ஒத்து போனது.
ஆனால் அவர்களால் பரிசை வெல்ல முடியவில்லை, ஏனெனில் அவர்களின் லொட்டரி டிக்கெட் தொலைந்து போயிருந்தது. அடுத்த 30 நாட்களுக்குள் டிக்கெட்டை கொடுத்தால் தான் பரிசை பெற முடியும் என நிறுவனம் சொன்ன நிலையில் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.
தங்கள் கணினியில் அது தொடர்பாக சேமித்து வைத்த தகவல்களை காட்டியும் அதை லொட்டரி நிறுவனம் ஏற்கவில்லை. இதையடுத்து பிரித்தானியாவின் துரதிஷ்டவசமான ஜோடி, அதிர்ஷ்டமில்லாத ஜோடி என இருவரும் அழைக்கப்பட்டனர்.
லொட்டரி நிறுவனத்திடம் இருந்து பரிசை பெற நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.
இந்த நிலையில் டோட் - கே தம்பதி தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் நாங்கள் நன்கு பேசியே பிரிந்து செல்ல முடிவெடுத்தோம் என தெரிவித்துள்ளனர்.