கொரோனாவால் இறந்தவரின் உடலை கடித்து குதறி... முகத்தை சிதைத்த நாய்! கண்ணீர் விடும் உறவினர்கள்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தகனத்திற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை நாய் கடித்து குதறிய சம்பவம், குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இந்தியாவில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்திரப்பிரததேசத்தின், காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில், ஆடர்லியாகப் பணியாற்றிய 51 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இதையடுத்து, கொரோனா விதிமுறைகளின்படி மருத்துவமனை நிர்வாகம் அவரின் உடலைக் குடும்பத்தினரிடம் வழங்கினர். பிபிஇ கிட்டில் உடலைச் சுற்றி, அதற்கு மேல் பாலித்தீன் கவரால் சுற்றி உடல் வழங்கப்பட்டது.
அதன் பின் நடந்த சம்பவம் குறித்து, கொரோனாவால் உயிரிழந்தவரின் நண்பர் திரிலோக் சிங் என்பவர் கூறுகையில், நாங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி வரை ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தோம், வரவில்லை.
இறுதியாக நேற்று காலை 8 மணிக்கு ஆம்புலன்ஸ் கிடைத்தது. அதில் உடலை ஏற்றிக்கொண்டு ஹின்டன் தகனப் பகுதிக்குச் சென்றோம். அங்கு சென்றபின் எங்களுக்கு முன் ஏராளமான உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு 10 மணிக்கு டோக்கன் வழங்குவார்கள் எனத் தெரிவித்தனர்.
இதனால் அருகே இருந்த பிளாட்பார்மில் உடலை வைத்துவிட்டோம் காத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அவரின் உடலை பிளாட்பார்மில் வைத்துவிட்டு, வெயில் கடுமையாக இருந்ததால் நிழலில் ஒதுங்கி நின்றோம்.
ஏராளமான உடல்கள் இருந்ததால், நாங்கள் தகனம் செய்ய மாலை 6 மணி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகலின்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர் எங்களிடம் வந்து, நீங்கள் பிளாட்பார்மில் வைத்திருந்த உடலை நாய் கடித்துக் குதறிவிட்டது,
முகத்தைச் சிதைத்துவிட்டது என்று கூறினார் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வந்து பார்த்த போதும், அவர் சொன்ன படியே நாய் கடித்து குதறியிருந்ததாக வேதனையுடன் கூறினார்.
அதன் பின் இது குறித்து உறவினர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், விரைந்து வந்த அதிகாரிகள், தெருநாய்கள் வராத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.