மனைவியை சூட்கேசில் அடைத்து 400 கி.மீ எடுத்துச் சென்று கணவன்! மகன், தந்தை இருவரும் கைது
உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து, சுமார் 400 கி மீ தள்ளிச் சென்று உடலை கணவன் எரித்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை காணவில்லை
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் அபிஷேக் என்பவர், அவரது மனைவி வந்தனா அவாஸ்தி(28) உடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் சீதாபூர் சாலையில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் டாக்டர் அபிஷேக், நவம்பர் 27ம் திகதி தன் மனைவி வந்தனா அபிஷேக்-கை காணவில்லை என்று கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் காணாமல் போன தனது மனைவி வீட்டில் இருந்த சில விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்து சென்று விட்டதாக டாக்டர் அபிஷேக் புகார் அளித்துள்ளார்.
உடலை எரித்த கணவன்
அபிஷேக் அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். அப்போது விசாரணையில் அபிஷேக் மற்றும் வந்தனா தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு வந்து போகியுள்ளது என்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து கணவர் அபிஷேக்-கை ரகசியமாக கண்காணித்த பொலிஸாருக்கு, அவர் மீது சந்தேகம் வலுப்பெற, அபிஷேக்கை அழைத்து தீவிர விசாரணை செய்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையை தாங்க முடியாத அபிஷேக், மனைவியுடனான சண்டையின் போது அவரை அடித்ததாகவும், அதில் மனைவி வந்தனா இறந்து விட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனைவியின் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல், உடலை 400 கி மீ தொலைவுக்கு அப்பால் யாரும் இல்லாத இடத்திற்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த கொலைக்கு அபிஷேக்கின் தந்தையும் உடந்தையாக இருந்ததை தொடர்ந்து, அபிஷேக்குடன் சேர்த்து அவரது தந்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.