வெளியேறத் தயாராகுங்கள்... மத்திய கிழக்கில் தன் குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
மீண்டும் ஈரான் போர் உக்கிரமடையக் கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள தனது குடிமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
எதிர்பாராத பதற்றம்
பஹ்ரைன், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் சனிக்கிழமையன்று இணையவழி ஆலோசனைகளை வெளியிட்டன.
மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் எதிர்பாராத பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கர்களை எச்சரித்துள்ளது.
ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான தற்போதைய முயற்சிகள் தோல்வியுற்றால், ஈரானை மிகக் கடுமையாகத் தாக்குவேன் என்ற ட்ரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஆனால், சவுதி அரேபியாவின் தலையீடு மற்றும் ஈரானின் மிரட்டல் உள்ளிட்டக் காரணங்களால் ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது, ஈரான் மீதானத் தாக்குதலைக் கைவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, மத்திய கிழக்கு நேச நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், ஈரான் தரப்பில் இருந்து அப்படியான தகவல் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள், எச்சரிக்கையாக இருக்குமாறும், சாத்தியமான விமான ரத்துகள், வான்வெளி மூடல்கள் மற்றும் பிற பயண இடையூறுகளுக்குத் தயாராக இருக்குமாறும் அமெரிக்க வெளிவிவகார மற்றும் தூதரக விவகாரங்கள் துறை வலியுறுத்தியுள்ளது.
பல விமான நிறுவனங்கள் தங்களின் வழக்கமான சேவை அட்டவணையை மீண்டும் தொடங்கும் திட்டங்களை ஒத்திவைத்துள்ளதாகவும், மற்றவை வழித்தடங்களை முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
உன்னிப்பாகக் கண்காணிக்கு
அப்பகுதியில் உள்ள அமெரிக்கர்கள், நிலைமை மேலும் மோசமடைந்தால் அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறும் அல்லது அவ்வாறு செய்யத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது அல்லது அதன் வழியாகப் பயணம் செய்வது போன்ற எந்தவொரு திட்டத்தையும் மறுபரிசீலனை செய்யுமாறு அந்த ஆலோசனைக் குறிப்பு பரிந்துரைத்துள்ளது.
பயணம் செய்ய முடிவெடுப்பவர்கள், விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் அறிவிப்புகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த காலங்களில் அமெரிக்கத் தூதரகங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன என்றும், ஈரான் அல்லது ஈரானுடன் இணைந்த குழுக்கள், அமெரிக்காவுடன் தொடர்புடைய வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களைக் குறிவைக்கக்கூடும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |