எங்களின் மிகப்பெரிய தவறு... 10 பேர் கொண்ட காபூல் குடும்பம் கொல்லப்பட்டதில் வருத்தம் தெரிவித்த அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேறும் முன்னர் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 10 பேர் கொண்ட குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் குடும்பம் என தவறான தகவலின் அடிப்படையில் ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்ததாக விசாரணையில் தெரிய வந்ததன் பிறகு, அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.
இது எங்களின் மிகப்பெரிய தவறு எனவும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகஸ்ட் 29ம் திகதி சமேரி அஹ்மதி என்பவர் தமது காரில் குடிநீர் பீப்பாய்களை ஏற்றும் போது, கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த ட்ரோன் ஒன்று அதை வெடிகுண்டு நிரப்பிய பீப்பாய்கள் என தவறாக காட்டியதாலையே, தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா முன்னெடுத்த கடைசி ட்ரோன் தாக்குதலில், தவறுதலாக அமெரிக்க நிறுவனங்களுக்காக பணியாற்றி வந்த பொறியியலாளர்கள் கொல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் தகவல் வெளியிட்டிருந்தது.
கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த சமேரி அஹ்மதி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே தகவல் வெளியானது.
காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க தயாரான ஐ.எஸ் கொராசான் குழுவினரையே ட்ரோன் தாக்குதலில் கொன்றதாக அமெரிக்கா அப்போது விளக்கமளித்திருந்தது.
மேலும், பல மணி நேர கண்காணிப்புக்கு பின்னரே, தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மட்டுமின்றி, குறித்த தாக்குதலில் உள்ளூர் மக்கள் மூவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்கா அப்போது தெரிவித்திருந்தது.
ஆனால் மக்கள் குடியிருக்கும் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அந்த தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 10 பேர்கள் கொல்லப்பட்டதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. உடன் பணியாற்றுபவர்களை அவர்களின் குடியிருப்புக்கு சேர்ப்பித்த பிறகு, சுமார் 4.50 மணியளவில் சமேரி விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தமது குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
அதே வேளை சமேரி குடியிருப்புக்கு திரும்பியதை அறிந்த அப்பகுதி 7 சிறார்கள் உட்பட 9 பேர் கொண்ட குடும்பம் அவரது வாகனத்தை நெருங்க, சமேரியுடன் அந்த ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு பின்னர் சமேரியின் கார் வெடித்து சிதறியதாக அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் அவ்வாறான சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்றே டைம்ஸ் பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.