அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை: ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி!
ரஷ்யா நாட்டுடன் தொடர்புடைய அனைத்து விமானங்களையும் அமெரிக்க வான்பரப்பில் பறப்பதற்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடை விதித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தனது கடுமையான ராணுவ தாக்குதலை தொடர்ந்துவரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகள் அவர்களின் வான்பரப்பை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடைவிதிக்க படுவதாக அறிவித்திருந்தது.
இந்தநிலையில், செவ்வாய்கிழமை இரவு அமெரிக்காவின் ஒன்றிய மாகாண சபையில் (2022 State of the Union Address) உரையாற்றிய அமெரிக்க ஜானதிபதி ஜோ பைடன், உக்ரைன் மீதான ரஷ்ய போரை கண்டித்து, அமெரிக்காவின் நட்பு நாடுகள் அறிவித்த வான் பரப்பு தடையில் நமது நாடும் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதன்முலம் அமெரிக்காவின் வான்பரப்பில் ரஷ்ய நாட்டுடன் தொடர்புடைய அனைத்து வான் ஊர்திகளும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
மேலும் ரஷ்யாவை தனிமைபடுத்தி அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு முன்னதாக செவ்வாய்கிழமை மாலை அமெரிக்காவின் போக்குவரத்து மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், புதன்கிழமை முதல் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான, தொடர்புடைய, அல்லது விமானத்தை செயல்படுத்தக்கூடிய என அனைத்து விதமான ரஷ்ய விமானங்களும் அமெரிக்க வான்பரப்பில் தடைசெய்ய படுவதாக தெரிவித்து இருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்கு முன்பாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வான்பரப்பு தடையை எதிர்த்து ரஷ்யாவும், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் வான்பரப்பை பயன்படுத்த தடைவிதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.