அமெரிக்காவில் உச்சம் பெற்ற கொரோனா இறப்புகள்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பரவல் முதன்முதலில் கண்டறியப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையிலும் அதன் கோர தாண்டவம் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
உருமாற்றம் கண்டு அடுத்தடுத்து அலைகளாக வந்து இன்னமும் பல நாடுகளில் வீரியத்துடன் பரவி வருகிறது. பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனால், நம்பிக்கை துளிர்க்கும் வகையில் பல நாடுகளில் தொற்று பரவல் சற்று தணிந்து காணப்படுகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் தற்போது தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 63 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,43,44,659- என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,288 பேர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா பாதிப்பு பற்றிய விவரத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை அடுத்து தொற்றுநோயால் பிரேசில் 488,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, மூன்றாம் இடத்தில் இந்தியா 377,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை சுமார் 173 மில்லியன் மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுபூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.