இந்தியா செல்ல பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான பரிந்துரையில் அமெரிக்கா தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த போது அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு நான்காம் நிலை எச்சரிக்கை விடுத்தது. இதன்படி அமெரிக்க குடிமக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
தற்போதுஇந்தியாவில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. 125 நாட்களுக்கு பின் ஒரு நாள் தொற்று பாதிப்பு 30,000-ஆக நேற்று குறைந்தது.
இதையடுத்து இந்தியா செல்வதற்கான பயண கட்டுப்பாடுகளில் அமெரிக்க அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அது மூன்றாம் நிலை எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியா செல்ல விரும்பும் அமெரிக்கர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி செல்லும்படி கூறப்பட்டுள்ளது.
மேலும், பயண திட்டத்தை ஒரு முறை மறுபரிசீலனை செய்யும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கான பயண பரிந்துரையையும் நான்காம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்கு அமெரிக்கா தளர்த்தி உள்ளது.