பல நாடுகளின் ஆட்சி கவிழ்ப்புக்கு நான் காரணம்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், பல நாடுகளின் ஆட்சி கவிழ்ப்புக்கு உதவியதாக ஒப்புக்கொண்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் போல்டன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டவர். இவர் ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோரது ஆட்சிக்காலத்திலும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
2018-19 காலகட்டத்தில் டிரம்ப் ஆட்சியில் இருந்தபோது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயல்பட்ட போல்டன் வெனிசுலா நாட்டில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை தேவை எனக் கூறி வாதிட்டார்.
இந்த நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் போல்டன் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அப்போது போல்டன் கூறிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, வெளிநாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு தான் உதவியதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'சதித்திட்டங்களைத் திட்டமிட உதவிய ஒருவராக கூறுகிறேன், இங்கு நான் எந்தவித ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால் வெளிநாடுகளில் அதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக வேலைகள் செய்யவேண்டும்' என தெரிவித்தார்.
ஆனால் அவர் எந்தெந்த நாடுகளின் அரசாங்கங்களை கவிழ்க்க உதவினார் என்பது பற்றி குறிப்பிடவில்லை. போல்டனின் வெளியுறவுக் கொள்கையின் தலையீட்டு அணுகுமுறை, டிரம்புடன் முரண்பாட்டை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
PC: AP Photo/Susan Walsh