அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்கள்: அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்பது போல, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துவரும் மிரட்டலால் அமெரிக்காவுக்கே இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க சுற்றுலா வேண்டாம்...
கனடா மீது கூடுதல் வரிகள், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டல் என கனடாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி, உள்நாட்டு வர்த்தகத்துக்கும் உள் நாட்டு சுற்றுலாவுக்கும் ஆதரவளிக்குமாறு கனேடிய மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மார்க் கார்னியின் செய்தியை கனேடியர்கள் பலர் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆம், 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சாலை மார்க்கமாக அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்கள் எண்ணிக்கை 35.2 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆகாய மார்க்கமாக அமெரிக்கா செல்லும் கனேடியர்கள் எண்ணிக்கையும் 20 சதவிகிதம் குறைந்துள்ளது.
முக்கிய விடயம் என்னவென்றால், கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பதன் விளைவை அமெரிக்கா அனுபவிக்கத் துவங்கிவிட்டதாக பயண நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்க விமான நிலையங்கள், ஹொட்டல்கள் மற்றும் எல்லையிலுள்ள கடைகளுக்கு கனேடிய டொலர்கள் வடிவில் வரும் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில், கனடாவின் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கணிசமாக அதிகரித்துவருகிறது. 2020க்கு முன், அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில் முக்கிய இடம் பிடித்தவர்கள் கனேடியர்கள் என்ற நிலை இருந்தது.
ஆகவே, தற்போது கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அமெரிக்கர்களால் நன்கு உணர முடிகிறது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த விடயம், அதாவது, கனேடியர்களின் அமெரிக்க புறக்கணிப்பு, நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |