வீட்டிற்குள் சடலமாக 10 வயது சிறுமி..கைது செய்யப்பட்ட சிறார்
அமெரிக்காவில் 10 வயது சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சிறார் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த கேத்தரின் அலிசியன்னா பிக்பீ என்ற 10 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

அவர் கடந்த 17ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில், பியட்மாண்டில் உள்ள தனது வீட்டில் இல்லாததையடுத்து இந்த புகார் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பியட்மாண்ட் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு வந்தபோது, சிறுமி கேத்தரினைக் கண்டெடுத்தனர்.
பலமுறை கத்தியால் குத்தப்பட்ட அவர், உடல் அசைவின்றி இருந்ததால் முதலுதவி அளிக்கப்பட்டு பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து மற்றொரு சிறார் காவலில் எடுக்கப்பட்டு அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதயம் நொறுங்கும் சூழல்
இதுகுறித்து காவல்துறைத் தலைவர் ஒரு அறிக்கையில் கூறுகையில், "இது தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெற்று வரும் ஒரு விசாரணையாகும். இந்த வழக்கின் தன்மை மற்றும் இதில் சிறுமிகள் சம்பந்தப்பட்டுள்ளதன் காரணமாக, தற்போதைக்கு வேறு எந்த விவரங்களையும் வெளியிட இயலாது.
இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், அத்துடன் நமது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இது ஒரு இதயம் நொறுங்கும் சூழலாகும். இந்த மிகவும் கடினமான நேரத்தில், இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உங்கள் எண்ணங்களிலும், பிரார்த்தனைகளிலும் நினைவுகூருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறுமி கேத்தரினின் மரணம் ஒரு கொலைச் செயல் என்றும், உடலில் ஏற்பட்ட பல கத்திக்குத்து காயங்களே அவரது மரணத்திற்கு வழிவகுத்தன என்றும் மருத்துவப் பரிசோதகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |