நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை
அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் அறிவித்துள்ள புதிய கொள்கையின் அடிப்படையில், அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினர், நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இனி தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்றே தெரிய வருகிறது.
அனுமதிக்கப்பட மாட்டார்கள்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தற்போது அமெரிக்காவில் தற்காலிக விசாக்களின் கீழ் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், பொதுவாக இனிமேல் நாட்டிற்குள்ளிருந்தபடியே நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பச் செயல்முறையை நிறைவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இனிமேல், அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் ஒரு அயல்நாட்டவர், நிரந்தர வதிவிட உரிமம் பெற விரும்பினால், விதிவிலக்கான சூழல்களைத் தவிர, விண்ணப்பிப்பதற்காகத் தனது சொந்த நாட்டிற்கே திரும்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையானது, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நமது குடிவரவு அமைப்பு சட்டத்தின் நோக்கத்திற்கேற்ப செயல்பட அனுமதிக்கிறது என்றே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் Zach Kahler தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கும்போது, குடியிருப்பு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே மறைந்திருக்கத் தீர்மானிப்பவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டிய தேவையை இது குறைக்கிறது என Zach Kahler தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அல்லது சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் போன்ற குடியேறிகள் அல்லாதோர், ஒரு குறுகிய காலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் அமெரிக்காவிற்கு வருகின்றனர்.
அவர்களின் வருகை முடிந்ததும் அவர்கள் வெளியேறும் வகையில் அமெரிக்காவின் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகை, நிரந்தர வதிவிட செயல்முறையின் முதல் படியாகச் செயல்படக்கூடாது எனவும் Zach Kahler குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான நடவடிக்கை
இந்த நகர்வால், மாணவர்கள், H-1B மற்றும் L விசாக்களில் உள்ள தொழில் வல்லுநர்கள், மற்றும் தற்காலிகப் பார்வையாளர்கள் உட்பட, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் பாதிக்கக்கூடும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள் மற்றும் உயர் திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பாதிக்கும் தொடர்ச்சியான கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குடிவரவு தொடர்பான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் பேர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமம் வழங்குகிறது; எனினும், அவற்றில் ஏறக்குறைய பாதி, அமெரிக்கக் குடிமக்களால் பரிந்துரைக்கப்படும் உறவினர்களுக்கே வழங்கப்படுகின்றன.
அந்த விண்ணப்பங்கள் ஏற்கனவே பெரும்பாலும் அமெரிக்காவிற்கு வெளியேதான் பரிசீலிக்கப்படுகின்றன என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |