வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து கர்ப்பிணிப் பெண் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் நடத்த கொடூர சம்பவம்
அமெரிக்காவில் தனது சொந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் வடகிழக்கு பிலடெல்பியாவில், சனிக்கிழமை இரவு நடந்துள்ளது.
தனது சொந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தனக்கு வந்த பரிசுகளை தனது காரிலிருந்து இறக்கிக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணையும், அவரது வயிற்றில் இருந்த சிசுவையும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டுக்கொன்றார்.
AP -ன் படி, நவம்பர் 20 அன்று இரவு 8:30 மணிக்கு லான்கிரெஸ்ட் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவர் தலை மற்றும் வயிற்றில் கொடூரமாக சுடப்பட்டார்.
பின்னர் ஐன்ஸ்டீன் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சனிக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 9:15 மணியளவில் அவரது கருவில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொடூரமான கொலையில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றோ அல்லது என்ன காரணமோ தெரியவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அறிக்கையின்படி, ரோந்துப் பணியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கியாழ் சுடும் சத்தம் இரண்டு பிளாக்குகளுக்கு அப்பால் கேட்டதாகவும், அங்கு சென்று பார்த்தபோது, கர்ப்பிணிப் பெண் தனது வீட்டிற்கு வெளியே இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும், அவரது தலை மற்றும் வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் குறைந்தது 11 ஷெல் உறைகள் புலனாய்வாளர்களால் சேகரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சூழ்நிலையைப் பார்க்கும்போது, யாரோ அப்பெண்ணை குறிவைத்து, தேடி கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.