காதலரைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
இளம் வயதில் தான் காதலித்த நபருடன் வாழ்வதற்காக அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் தற்போது விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், பிரான்ஸ் திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காதலரைத் தேடி...
பிரான்ஸ் நாட்டவரான மேரி தெரேஸ் (86), 1950களில் நேட்டோ ராணுவத் தளம் ஒன்றில் பணிபுரியும்போது பில்லி என்னும் அமெரிக்கரை சந்தித்துள்ளார்.

இருவரும் காதலிக்கத் துவங்கிய நிலையில், 1960களில் அமெரிக்க ராணுவம் நாடு திரும்பவேண்டிய நிலை உருவாக, பில்லி அமெரிக்கா திரும்ப நேர்ந்துள்ளது.
பின்னர், மேரியும் பில்லியும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்துகொண்டு தத்தம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு, சமூக ஊடகம் வாயிலாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளார்கள்.
2022ஆம் ஆண்டு, இருவரது துணைவர்களும் மரணமடைந்தபின், பில்லியுடன் வாழ்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் மேரி.
ஆனால், மேரி கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பில்லி மரணமடைந்துவிட்டார்.
பில்லி இறந்ததும் அவரது சொத்துக்கள் குறித்து மேரிக்கும் பில்லியின் மகனுக்கும் பிரச்சினை உருவாக, மேரியை மிரட்டிய பில்லியின் மகன், மேரி வீட்டுக்குச் செல்லும் தண்ணீர், மின்சாரம், இண்டர்நெட் என அனைத்து இணைப்புகளையும் துண்டித்துள்ளார்.

மேரி வழக்குத் தொடர, அவரது வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, மேரியின் விசா காலம் முடிவடைந்ததால் அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மேரியை கைது செய்துவிட்டார்கள்.
ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
இந்நிலையில், மேரி காவலிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுவிட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட்டும், மேரி வெள்ளிக்கிழமை காலை பிரான்ஸ் திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், தங்களுக்கு அந்த செய்தி ஆறுதலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேரி கைது செய்யப்பட்டபோது பயங்கர குற்றவாளியைப் போல அவருக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டதாக தெரிவித்துள்ள அவரது மகன், தன் தாய் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்படும்போது கூட, அவருக்கு கறைபடிந்த கிழிந்த சிறை உடை அணிவிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
மேரி காவலில் அடைக்கப்பட்டிருந்த விடயம் குறித்து அவரது மகனிடம் கேட்டபோது, அது கவலையை ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கரமானதாக இருந்ததாக தெரிவிக்கும் அவர், எங்களைப்பொருத்தவரை, அம்மா பிரான்ஸ் திரும்பிவிட்டார்கள் என்பதே எங்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரே விடயம் என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |