ஜேர்மனிக்கு எதிராக ட்ரம்ப் எடுக்க இருந்த நடவடிக்கையை மாற்றி நல்ல பெயர் வாங்கிக்கொண்ட ஜோ பைடன்
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம் ஒன்றை முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் எதிர்த்து வந்த நிலையில், வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார் தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன்.
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு வருவதற்காக Nord Stream 2 என்ற பெயரில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவுக்கு இதனால் எரிவாயு வர்த்தகத்தில் இழப்பு நேரிடும் என்பதால், அமெரிக்க அதிபரான டரம்ப் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், ஜேர்மனி மீது தடைகள் விதிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த விடயத்தில் சாணக்கியத்தனத்துடன் முடிவெடுத்துள்ளார் தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன்.
அதாவது, ஏற்கனவே ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் குழாய்கள் பதிக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்தாயிற்று. இனி அதை எதிர்த்தும் பிரயோஜனமில்லை. ஆகவே, இதன் மூலம் ஜேர்மனியின் பகையை சம்பாதிக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ஜேர்மனி மீது அமெரிக்கா தடைகள் விதிக்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார் ஜோ பைடன்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக, ரஷ்யாவும் இந்த முடிவை வரவேற்றுள்ளது.
இந்த முடிவு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நல்ல உறவை ஏற்படுத்தும்
என ரஷ்ய தரப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.