அமெரிக்கா உடனான ஸ்டார்மரின் ஒப்பந்தம்... 229,000 இறப்புகளுக்கு வழிவகுக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை
அமெரிக்காவுடனான ஸ்டார்மர் அரசாங்கத்தின் மருந்து வர்த்தக ஒப்பந்தத்தால், அடுத்த பத்தாண்டுகளில் NHS இங்கிலாந்துக்கு 45 பில்லியன் பவுண்டுகள் வரையில் இழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய மருந்துகளுக்காக
அத்துடன், குறைந்தபட்சம் 229,000 இறப்புகளுக்கும் காரணமாக அமையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிக வர்த்தக வரி விதிப்பதைத் தடுப்பதற்காக, 2035-ஆம் ஆண்டுக்குள் புதிய மருந்துகளுக்கு அமெரிக்காவுக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த பிரித்தானியா ஒப்புக்கொண்டது; இம்முடிவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, சுகாதாரச் சேவையின் ஆண்டு மருந்துச் செலவு அதன் பட்ஜெட்டில் சுமார் 9.5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயரும் என்றும், இதனால் பொதுமக்களின் வரியில் ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் பவுண்ட் செலவு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) இதழில் வெளியாகியுள்ள புதிய பகுப்பாய்வு ஒன்றின்படி, இந்த ஒப்பந்தமானது NHS-இன் மிக முக்கியமான நேரடிச் சேவைகளுக்கான நிதியை புதிய மருந்துகளுக்காகத் திசைதிருப்பும் என்றும், இதனால் 2036-ஆம் ஆண்டுக்குள் 44.7 பில்லியன் பவுண்டுகள் என்ற மலைக்க வைக்கும் செலவு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சேவைகளுக்கான நிதியைக் குறைப்பது, தவிர்க்கக்கூடிய 229,000 கூடுதல் இறப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும், பெரியவர்களுக்கான சமூகப் பராமரிப்பு சேவைகளையும் இது பாதித்தால் அந்த எண்ணிக்கை 291,000-ஆக உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
மேலும், இதயம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள், செரிமான மண்டலத்தைப் பாதிக்கும் நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ள நோயாளிகளிடமே இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனை, யார்க் பல்கலைக்கழகம் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த ஒப்பந்தம் இனி பொதுமக்களாலும் நாடாளுமன்றத்தாலும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
நிதிப் பற்றாக்குறை
இந்த நிலையில், தொழில்துறை அழுத்தங்களுக்கு இணங்கிச் செயல்பட அரசாங்கம் காட்டும் விருப்பமும், அதன் விளைவாக ஏற்படும் செலவுகளை தேசிய சுகாதார சேவை (NHS) ஏற்றுக்கொள்வதும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து முக்கிய கேள்விகளை எழுப்புவதோடு, 2019-ல் அது அளித்த உறுதிமொழிகளிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் குறிக்கிறது என BMJ இதழில் வெளியாகியுள்ள அந்த பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
மருந்துகளுக்கான செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீதத்திலிருந்து 0.6 சதவீதமாக இரட்டிப்பாக்குவது குறித்த அரசின் திட்டம் மற்றும் உத்தியோகப்பூர்வ பொருளாதாரக் கணிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தங்கள் நிதி மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் விளைவாக, 2028-ஆம் ஆண்டில் NHS இங்கிலாந்தின் ஆண்டுச் செலவு 1.3 பில்லியன் பவுண்டுகள் அதிகரிக்கும் என்றும், 2036-ஆம் ஆண்டிற்குள் அது 8.8 பில்லியன் பவுண்டுகளாக உயரும் என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.
இத்திட்டத்தின் மொத்த காலப்பகுதியில், இதற்கான செலவு 44.7 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும். ஆனால், 2029-ஆம் ஆண்டிற்குள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்று அரசாங்கம் மதிப்பிட்டிருந்தது.
கூடுதல் இறப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு, சுகாதாரச் செலவீனங்களில் ஏற்படும் மாற்றங்கள் நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளுடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதை ஆராயும் அளவீடுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கணிப்புகளின் அடிப்படையில், 2033-ஆம் ஆண்டளவில் சுமார் 137,000 கூடுதல் இறப்புகள் ஏற்படலாம் – இது கோவிட் பெருந்தொற்றின் முதல் இரண்டு ஆண்டுகளில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கைக்கு இணையானதாகும் – பின்னர் 2036-ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை சுமார் 229,000-என அதிகரிக்கக்கூடும்.
புற்றுநோய், இதயம், சுவாசம் மற்றும் செரிமானம் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களைத் தவிர, மூளை மற்றும் ஹார்மோன் கோளாறுகள், தசை மற்றும் எலும்புப் பிரச்சினைகள் மற்றும் மனநலச் சிக்கல்கள் உள்ள நோயாளிகளையும் நிதிப் பற்றாக்குறை பாதிக்கக்கூடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |