ரஷ்ய விவகாரம்... போருக்கு தயார் நிலையில் அமெரிக்கப் படைகள்
ரஷ்ய- உக்ரைன் விவகாரம் இறுகிவரும் நிலையில், போருக்கு தயாரான சுமார் 8,500 அமரிக்கப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டளை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில் இவர்கள் புறப்பட தயாராவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது. உக்ரைன் மீது எந்த இராணுவ நடவடிக்கைக்கும் ரஷ்யா தயாரில்லை என புடின் நிர்வாகம் மறுத்துள்ள நிலையிலேயே, அமெரிக்க இராணுவம் உஷார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ நடவடிக்கைக்கு தயாரில்லை என ரஷ்யா மறுத்தாலும், உக்ரைன் எல்லையில் 100,000 துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் மேற்கத்திய நாடுகள் ஒரு பொதுவான திட்டத்தில் கவனம் செலுத்துவதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இராணுவப்படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தாலும், எப்போது அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு இன்னமும் எட்டவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைனுக்குள் அமெரிக்க துருப்புகளை அனுப்பி வைக்கும் திட்டமும் தற்போது இல்லை என தெரிவித்துள்ளார் பென்டகன் பத்திரிகை செயலாளர் ஜான் கிர்பி.
இருப்பினும் இராணுவத்தினருக்கு தேவையான 90 டன் அளவுக்கு தளவாடங்களை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா.
இதனிடையே, டென்மார்க், ஸ்பெயின், பல்கேரியா மற்றும் நெதர்லாந்து உட்பட சில நேட்டோ உறுப்பினர்கள் ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவிற்கு போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பி அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.