பிரித்தானிய தடுப்பூசியின் செயல்திட்டத்தை உளவாளிகள் மூலம் திருடி ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா: பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தடுப்புசியை தான் பெற்றுக்கொண்டதாகக் கூறி நாட்டு மக்களையும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கப்பட்டதும், அது தொடர்பான பாதுகாப்புப் பரிசோதனையில் வெறும் 76 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். அதிலும் பாதி பேருக்கு மட்டுமே ஸ்புட்னிக் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
அந்த ஆய்வை மேற்கொண்டரஷ்ய ஆய்வாளர்கள், அந்த தடுப்பூசி பெற்றுகொண்ட அனைவருக்கும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாகவும், பெரிய அளவிலான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்கள்.
பிரபல பிரித்தானிய மருத்துவ பத்திரிகையான The Lancetம், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக், பிரித்தானிய தடுப்பூசியான ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் போலவே செயல்படுவதாகவும், அது பாதுகாப்பானது என்றும், செயல் திறன் மிக்கது என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால், ஸ்புட்னிக் தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் செயல்திட்டத்தைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக தற்போது பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ரஷ்யாவுக்காக வேலைபார்க்கும் உளவாளிகள், ஆக்ஸ்போர்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கான செயல்திட்டத்தை திருடிச் சென்றதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாக சிலர் பிரித்தானிய அமைச்சர்களிடம் பரபரப்புத் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்கள்.
அப்படித் திருடப்பட்ட ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கான செயல்திட்டத்தைக் கொண்டே ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த ஏஜண்ட் ஒருவர், ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தயாரிப்பதற்கான செயல்திட்டத்தையும் முக்கிய தகவல்களையும் திருடியதாக The Sun பத்திரிகை தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளின் கணினிகள் முதல் தொலைபேசிகள் வரை ஹேக் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டாலும் இதுவரை எதையும் ஒப்புக்கொள்ளாத ரஷ்யா, இந்தக் குற்றச்சாட்டை மட்டும் ஒப்புக்கொள்ளப்போகிறதா என்ன?