ஆப்கானிஸ்தானியர்களை மீட்கும் விடயத்தில் ஜேர்மனிக்கு உதவ தன் எல்லைகளை திறந்து கொடுக்கும் நாடு
அபாயத்திலிருப்பவர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் விடயத்தில் ஜேர்மனிக்கு உதவ உஸ்பெகிஸ்தான் நாடு தயாராக இருப்பதாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் குடிமக்கள், அவர்களுக்கு உதவிய உள்ளூர் அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் ஆபத்து இருப்பதாக ஜேர்மனி கணக்கிட்டுள்ளது.
அவர்களை எப்படியாவது ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, ஒன்றில் காபூல் விமான நிலையம் திறந்திருந்தால் அங்கிருந்து மக்களை விமானம் மூலம் மீட்பது, அல்லது பக்கத்து நாடுகளுக்கு அவர்களை அனுப்புவது என திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக துருக்கி, உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துவரும் அவர், உஸ்பெகிஸ்தான் தங்கள் முயற்சியில் தங்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிருந்து தப்பி வருவோரை ஏற்றுக்கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் தன் எல்லைகளை திறந்துவிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas.