கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 1 மில்லியன் டொலர் பரிசு: எங்கே தெரியுமா?
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அடுத்த 5 வாரங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நபர்களில் வாரம் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசாக அளிக்கப்படும் என மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம் எனவும், அடுத்த 5 வாரங்கள் இந்த திட்டம் அமுலில் இருக்கும் எனவும் மாகாண ஆளுநர் Mike DeWine அறிவித்துள்ளார்.
மக்களிடையே தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரவுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என Mike DeWine தெரிவித்துள்ளார்.
லொட்டரி விதிகளுக்கு உட்பட்டு, வாரம் ஒருவருக்கு குலுக்கல் முறையில் 1 மில்லியன் டொலர் தொகை அளிக்கப்படும். மேலும் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கான பரிசு திட்டம் ஒன்றும் மிக விரைவில் அமுலுக்கு வரும் எனவும் Mike DeWine தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அடுத்த 5 வாரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு முழு கல்வி உதவித்தொகையும் மாகாண நிர்வாகமே ஏற்கும் எனவும் ஆளுநர் அறிவித்துள்ளார்.
மே 26 அன்று முதல் வெற்றியாளரை அறிவிக்க உள்ளதாகவும், அடுத்த 5 வாரங்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.