இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற மாணவர்கள் ஏழுபேருக்கு கொரோனா: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
அமெரிக்காவில், முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்ற மாணவர்கள் ஏழு பேருக்கு ஒரே வாரத்தில் கொரோனா தொற்று உருவாகியுள்ள விடயம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம், அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகத்தில் கண்டறியப்படுள்ளது. அமெரிக்காவில், சுமார் 600 பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மட்டுமே மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் அனுமதி என கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Stanford பல்கலைக்கழகமும் ஒன்று. அப்படியிருந்தும், அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் ஏழு பேருமே முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்றுக்கொண்டவர்கள், ஏழு பேருக்குமே கடந்த வாரத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதுவும் வெளிப்படையான அறிகுறிகளுடன் அவர்களுக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது. ஆனால், இப்படி தடுப்பூசி பெற்ற பின்பும் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவே என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
என்றாலும், புதிது புதிதாக திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் நிலையில், அவற்றிற்கெதிரான தடுப்பூசிகளின் செயல் திறன் போதுமானதாக இல்லையோ என்ற ஒரு அச்சம் எழுந்துள்ளது.