பிரித்தானியாவில் பொதுமுடக்கம் முடிவுக்கு வருவதில் புது சிக்கல்
ஏற்கனவே பிரித்தானியாவில் இம்மாதம் (ஜூன்) 21ஆம் திகதி விலக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த பொதுமுடக்கம் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலை 19 வரை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.
ஆம், இப்போது கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக பொதுமுடக்க விலக்கல் மேலும் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் நாளொன்றிற்கு 844,285 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், இந்த திங்கட்கிழமை அதில் பாதிபேருக்கு கூட தடுப்பூசி போடப்படவில்லை.
வெறும் 368,555 பேருக்கு மட்டுமே அன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தடுப்பூசி தட்டுப்பாடு.
குறிப்பாக, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் பிரச்சினைகள் ஏற்படுவது தெரியவந்ததையடுத்து, 40 வயதுக்கு கீழ் உள்ள அனைவருக்குமே ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு பதிலாக பைசர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பைசர் மற்றும் மொடெர்னா நிறுவன தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது என்பதை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
பிரச்சினை என்னவென்றால், ஏற்கனவே பொதுமுடக்க விலக்கல் தாமதம் ஆவதால் மக்கள் கொந்தளித்துப்போயிருக்கிறார்கள்.
அரசு ஜூலை 19 அன்று பொதுமுடக்கம் விலக்கப்படலாம் என அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் சற்றே ஆறுதலடைந்திருந்த நிலையில், இப்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் எதிர்பார்த்தபடி ஜூலை 19 அன்று வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிட முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே, மீண்டும் பொதுமுடக்க விலக்கல் மேலும் தள்ளிப்போகலாம் என்ற அச்சம்
எழுந்துள்ளது.