நான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது... முதல் முறையாக தமிழன் வருண்சக்ரவர்த்தி பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்!
கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின், வீரர்கள் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கொடுத்த, நம்பிக்கை குறித்து கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், காலவரையின்றி ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தான் முதன் முதலாக கொரோனாவால் பாதிக்கபட்டார்.
அதன் பின் அதே அணியில் இருக்கும் சந்தீப் வாரியர், இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் டெல்லி வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து சென்னை திரும்பியுள்ள வருண்சக்ரவர்த்தி அந்த அனுபவம் குறித்து கூறுகையில், கொரோனா தொற்று உறுதியான பின்பு, நமக்குள் நடைபெறும் கடினமான விஷயம் என்னவென்றால், உங்களை மொத்தமாக அது திசை திருப்பி, மற்ற அனைத்து விஷயங்களில் இருந்தும் உங்களை தனியாக உணர வைக்கும்.
குடும்பம் மற்றும் அணி வீரர்களுடன் இல்லாமல், தனியாக இருப்பதால் அப்படி உங்களை உணர வைக்கும். தற்போது நான் குணமடைந்து வீட்டிற்கு வந்து விட்டேன். இருந்த போதும், பயிற்சிகளை ஒன்றும் நான் தொடங்கவில்லை.
கொரோனா அறிகுறிகள் இல்லாத போதிலும், எனது உடல் அதிக சோர்வாக உள்ளது. வாசனை மற்றும் ருசிகளை அதிக நேரம் உணர முடிவதில்லை. ஆனால், விரைவில் பயிற்சியை நான் தொடங்குவேன்.
தொடர்ந்து, கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட போது, தனது அணி நிர்வாகம் செய்த உதவி மறக்கமுடியாது. கொல்கத்தா அணி நிர்வாகம், எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது.
ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, அனைத்து வீரர்களும் சென்ற பிறகும், என்னைக் கவனித்துக் கொள்வதற்காக ஒருவரை நியமித்திருந்தார்கள். அதன் பிறகு, இரண்டு முறை நெகடிவ் என முடிவுகள் வந்த பிறகு தான், என்னை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
குறிப்பாக, அணியின் உரிமையாளாரான ஷாருக்கான், என்னைப் போன்ற அணியிலுள்ள அனைத்து வீரர்களுக்கும், தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழைத்துப் பேசினார். அவர் தான் எங்கள் அனைவருக்கும், அதிக நம்பிக்கை கொடுத்தார் என்று கூறியுள்ளார்.