விசிக தனித்து போட்டி - திருமாவளவன் அதிரடி அறிவிப்பு
புதுச்சேரியில் விசிக தனித்து போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி தேர்தல்
30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது.

திமுக கூட்டணியில் இழுபறியாக இருந்த தொகுதி பங்கீடு கடைசி நாளான நேற்றே முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் 16 தொகுதிகள், திமுக 14 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவது என முடிவானது.
விசிக தனித்து போட்டி
இந்நிலையில், 3 தொகுதிகள் கேட்டு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளது. எனவே புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது.
2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான -கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது.
புதுச்சேரி மாநிலத்தில் தனித்துப் போட்டி!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 24, 2026
----------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம்… pic.twitter.com/sZBatM1LcY
கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமார் 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்றோம்.
தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை.
திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிக'வுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்த போதிலும் வேடபு மனு தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. விசிகவுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
[
]நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இரட்டை இலக்க தொகுதிகள்?
நேற்று நடைபெற்ற விசிக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் 'இரட்டை இலக்கத்தில்' தொகுதிகளைக்பெற வேண்டுமென்றும், 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிகவுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு திமுக உடன் விசிக திமுக இடையே இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கபடும் நிலையில், திருமவளவனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |