அநீதி, அராஜகம், தில்லுமுல்லு - திமுகவை கிண்டலடித்த விஜய்
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளார்.
தவெக 3வது ஆண்டு தொடக்க விழா
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொள்கை தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதன் பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய், "தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். அந்த கண்ணீரை துடைக்க துவங்கப்பட்ட கட்சிதான் தவெக.
எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது சட்டசபையில் கேலி செய்தனர். அவருக்கு என்ன அனுபவம் உள்ளது? பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. திரைக்கவர்ச்சியை வைத்து அரசியலுக்கு வந்துள்ளார், கேள்விக்கு கேட்க மட்டும் தான் தெரியும் என விமர்சித்தார்கள்.
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு
இதையெல்லாம் அமைதியாக கவனித்த மக்கள் என்ன செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். இப்போது நாம் கட்சி தொடங்கிய போதும் அதே தான் பேசுறாங்க.

அந்த தேஞ்சுப் போன, துருப்பிடிச்சு போன Weapon-ஐ இப்போதும் எடுக்குறீங்களே கொஞ்சம் உங்க டெக்னிக்கை மாத்துங்க. பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும்.
ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.
திருவள்ளுவர் இந்த டிஜிட்டல் உலகத்தில் இருந்திருந்தால், "அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என திருக்குறள் எழுதியிருப்பார்.
தவெக தான் டாப் இன்ஜின்
கருத்துக்கணிப்பு எடுத்தால் ஒவ்வொரு வீட்டிலும் தவெக உள்ளது. முன்னதாக கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரின் செயல்களால் தன்னால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என முதல்வர் தெரிவித்திருந்தார்.

ஆனால் என்றாவது ஒருநாள் முதல்வர் நன்றாக தூங்கும் போது அவரை எழுப்பி எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டால் விசில் சின்னத்திற்கு என சொல்லுவார்.
தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி, நான்குமுனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன். இங்கே மாபெரும் மக்கள் சக்தி கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர் கூட்டணி தான் இருக்கிறது.
இதில், திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால் மட்டும் தான் முடியும். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதுதான் கள நிலவரம். தமிழக மக்களுக்கு தவெக தான் இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன். வேறு எந்த டைவர்ஷனும் அவர்களுக்கு இல்லை.

அதனால் டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின் என எது வந்தாலும் தவெக தான் டாப் இன்ஜின். தவெகவினர் இன்னும் கூர்மையாக வேலை செய்ய வேண்டும். ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக நம்முடன் இருக்கிறார்கள. அவர்களை தவெகவுக்கு ஓட்டுப்போட வைப்பதே உங்கள் வேலை. மற்றதை மக்களோடு சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன்" என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |