நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி யார்? நடந்தது என்ன? வெளியான முழு விபரம்
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி குறித்த விவரம் தற்போது வெளியாகி இணையத்தில், அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல திரைப்பட நடிகரான விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் எனும் சொகுசு காரை வாங்கியுள்ளார். இது ஒரு இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் கார் ஆகும்.
ஆனால் இப்போது ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ குழுமத்தின் அங்கமாக இருக்கிறது. இதனால், இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டீலர்ஷிப்புகள் மூலம்தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது.
அதன் படி, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள டீலர்ஷிப்பில்தான் விஜய்யும் இந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர் இந்த காரை வாங்கவில்லை.
டீலர்ஷிப்பில் கார் வாங்கும்போதே அதற்கான இறக்குமதி வரி உள்பட எல்லா வரிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. இருப்பினும், தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான மாநில நுழைவு வரி கட்டப்படவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் GST அப்போது இல்லை. அப்போது நடைமுறையில் இருந்த VAT வரிகள் இறக்குமதி கார்களுக்குப் பொருந்தாது.
இறக்குமதி கார்களைப் பொருத்தவரை 137 சதவிகித வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது. விஜய் வாங்கியிருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை 2.25 கோடி ரூபாய்.
இதற்கு இந்தியாவில் இறக்குமதி வரி 137 சதவிகிதம் சேர்த்தால் கிட்டத்தட்ட 5.25 கோடி ரூபாய் வருகிறது. அதுமட்டுமின்றி, இன்ஷூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன், சாலை வரி என மொத்தமாக பார்த்தால் இந்தக் காரின் சென்னை ஆன் ரோடு விலை 6.5 கோடி ரூபாய் வரும் என்று கூறப்படுகிறது.
இதில் நுழைவு வரி என்பது மாநிலங்களுக்கு இடையே காரை மாற்றி ரிஜிஸ்ட்ரேஷன் செய்யும்போது விதிக்கப்படுவது. அதாவது புதுச்சேரியில் வாங்கிய காரை தமிழ்நாட்டில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யவேண்டுமானால் நுழைவு வரி கட்ட வேண்டும்.
இந்த நுழைவு வரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வாங்கும் கார்களுக்கும் விதிக்கப்பட்டது. ஆனால், இறக்குமதி வரி கட்டி வாங்கும் கார்களுக்கு இந்த நுழைவு வரி பொருந்தாது என்பது சொகுசு கார் வாடிக்கையாளர்களின் வாதம்.
நுழைவு வரி கட்டினால்தான் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியும் என்பதால் இப்படி ஒரு வழக்கு போடப்படும்.
நீதிமன்றம் அப்போதைக்கு குறைந்தபட்ச வரியைக் கட்டச்சொல்லி, கார்களைப் பதிவு செய்ய அனுமதியளிக்கும். வழக்குத் தொடர்ந்து நடக்கும். இப்போது அப்படி தொடர்ப்பட்ட அந்த வழக்கில்தான் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்.
ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் நடிகர் விஜய்க்கே அபராதம் விதித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு முன், இவர் புதிய தலைமைச் செயலக முறைகேடு, புகார் தொடர்பான விசாரணை ஆணையம், கந்துடைப்பு என விமர்சித்தவர்.
அரசு அலுவலகங்களில் சிசிடிவி கமெரா பொருத்த உத்தரவிட்டவர், முன்னுதாரணமாக தன்னுடைய அறையிலே சிசிடிவி கமெராவை பொறுத்திக் கொண்டார்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்க ஆணையிட்டவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.