விஜய் மக்கள் இயக்கம் 51 இடங்களில் வெற்றி! முதல் தேர்தலிலே சாதித்து காட்டிய ரசிகர்கள்
தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி பெற்றிருப்பதாக, விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றன.
6-ஆம் திகதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகளும், 2-ஆம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
அவர்கள் விஜய் படம் பதித்த கொடியினை எடுத்துச்சென்றதால், தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த தடைவிதிக்க கோரி நடிகர் விஜய் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையில் கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக விஜய்யின் தந்தை சந்திரசேகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர், அவரின் ரசிகர்கள் பலரும் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டனர். தற்போது வரை வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்திக்கும் முதல் தேர்தல், இந்த தேர்தலில் விஜய் எந்த ஒரு பேட்டியோ, அல்லது அறிவிப்போ எதுவுமே செய்யவில்லை. இருப்பினும், தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலே இப்படி ஒரு வெற்றியை பெற்றுள்ளதால், இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.