நடிகர் விவேக்கிற்கு ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்துள்ளது! மரணம் குறித்து மருத்துவமனையின் துணைத் தலைவர் விளக்கம்
பிரபல திரைப்பட நடிகர் விவேக் உயிரிழந்த நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவமனையின், துணைத்தலைவர் விளக்கமளித்துள்ளார்.
நேற்று காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, நடிகர் விவேக, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, இன்று அவர் உயிரிழந்துள்ளதால், இதைப் பற்றிய ஒரு விவாதமும் சமூகவலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி, விவேக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நேற்று காலை 11 மணியளவில் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
கொண்டுவரும்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது.
இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்தது. அதைக் கண்டுபிடித்து சிகிச்சை செய்தோம்.
எக்மோ செய்தபிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது. பாதிப்பு தீவிரமாக இருந்ததால் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் முயற்சிகளுக்குப் பலன் இல்லை.
இந்த உடல்நலப் பிரச்னை ஒரே நாளில் வராது. ரத்தக் கொதிப்புக்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாக அவர் தரப்பில் சொன்னார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.