ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்குமா? பின்னணியில் ஒரு சம்பவம்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த சம்பவம்
ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராக பொறுப்பு வகித்துவருபவர் வோல்க்கர் டர்க் (Volker Türk).

ஆஸ்திரியா நாட்டவரும் சட்டத்தரணியுமான டர்க்கை, மேலும் நான்கு ஆண்டுகள் ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் பொறுப்பில் நீட்டிப்பது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் திங்கட்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
டர்க்குக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக 10 பேரும் வாக்களித்தனர், 13 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்க வரவில்லை.
பிரான்ஸ், டர்க்குக்கு ஆதரவாகவும், அமெரிக்கா, எதிராகவும் வாக்களித்தன.
இதற்கிடையில், பிரான்ஸ் பிரதிநிதி ஐ,நா கவுன்சிலில் உரையாற்றும்போது, பிரான்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
பின்னணி
விடயம் என்னவென்றால், வெள்ளிக்கிழமைதான் பிரான்சும் அமெரிக்காவும் மனித உரிமைகள் தொடர்பில், சமூக ஊடகமான எக்ஸில் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருந்தன.

அமெரிக்கா ஒரு காலத்தில் மனித உரிமைகளின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. இன்று, வடகொரியா, நிகராகுவா, மாலி மற்றும் ரஷ்யாவுடன், அமெரிக்கா தனித்து நிற்கிறது. அத்துடன், உலகம் இப்போது அமெரிக்காவின் பேச்சைக் கேட்பதில்லை என்று சமூக ஊடகமான எக்ஸில் பிரான்ஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ் உலகின் மோசமான அடக்குமுறையாளர்களுடன் நெருக்கமாக பழகிக்கொண்டே, அமெரிக்கா, பிரித்தானியா மறும் இஸ்ரேல் போன்ற சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு அறிவுரை கூறுகிறது என அமெரிக்க தரப்பு கூறியிருந்தது.
ஆக, பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணையவழி மோதல்கள் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் ட்ரம்புக்கும் மேக்ரானுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |