பிரித்தானியாவில் தடுப்பூசிகளுக்கான இடைவெளியை பாதியாக குறைக்க திட்டம்
பிரித்தானியாவல் கோவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸுக்கு இடையிலான காத்திருப்பு நேரம் பாதியாக குறைக்கப்பட வேண்டும் என No.10 (பிரதமர் அலுவலகம்) வலியுறுத்துகிறது.
பிரித்தானியாவில் ஜுலை 19-ஆம் திகதி முதல் கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளது. அன்றைய நாளை 'Freedom Day' என அழைக்கின்றனர். அதற்கு இன்னும் ஒரு வாரகாலம் இருக்கும் நிலையில், சிலமுக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அமைச்சர்கள் உட்பட பிரித்தானியாவில் அனைவரும் கட்டுப்பாடுகள் அற்ற தளர்வுகளையே எதிர்நோக்குகின்றனர்.
ஆனால், தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால், ஜூலை 19-ஆம் திகதிக்கு பிறகும் சில புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், தடுப்பூசிகள் செலுத்தப்படும் வேகத்தையும் அதிகரிக்க சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய வழிகாட்டுதலின் படி, முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையில் 8 வாரங்கள் இடைவெளி அளிக்கப்படுகிறது. ஆனால், அதனை பாதியாகக் குறைத்து இரண்டாவது டோஸுக்கான கால் இடைவெளியை 4 வாரங்களாக மாற்ற உடனடி ஆலோசனையை வழங்குமாறு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவிடம் (JCVI) அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
முதல் தடுப்பூசி செலுத்திய பிறகும் சிலருக்கு தொற்று ஏற்படும் நிலையில், விரைவாக இரண்டாவது தடுப்பூசியை செலுத்திவிட அரசு முனைகிறது. இது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும், மற்றும் வெளி நாடுகளுக்கு பயணம் செய்ய நினைக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
அதே நேரம் தொற்று எண்ணிக்கையை கணிசமாக குறைக்கவும், நான்காவது அலையிலிருந்து நாட்டை பாதுகாக்கவும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஜுலே 19-க்கு பிறகு நாடு எப்படி இயங்கும் என்பது குறித்து வரும் திங்கட்கிழமை சில முக்கிய அறிவிப்புகளுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.