இன்னும் 2 ஆண்டுகளில் சீனாவுடன் போர்., தயாராகும் அமெரிக்கா!
2025-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்படும் என அமெரிக்க விமான படை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க விமான படையில், விமான படை இயக்க தளபதியாக உள்ள ஜெனரல் மைக் மினிஹேன் தனது தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், 2025-ம் ஆண்டில் சீனாவுடன் போரிடுவோம் என்றும், வீரர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், தான் கூறுவது தவறாக இருக்க வேண்டும் என்றே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 1-திகதியுடன் வந்த அந்த கடிதம் நேற்று முன்தினமே அனுப்பப்பட்டுள்ளது.
Getty Images
பென்டகன் அதிகாரிகள்
இது குறித்து, அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், சீனாவின் மீது எங்களது துறை ரீதியிலான கருத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த விமர்சனங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சீனாவின் நடவடிக்கைகள் போருக்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என்பதுபோல் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை கூறுகிறது.
தைவான் ஜலசந்தி பகுதியில், சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பது சந்தேகம் கிளப்புவதாகவும், தைவான் தீவு மீது சீனா படையெடுப்பிற்கான அறிகுறியும் தென்படுகிறது என்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளரான லாய்டு ஆஸ்டின் இந்த மாத தொடக்கத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
தைவானுக்கு சீனா நெருக்கடி
தைவான் மீது சமீப ஆண்டுகளாக தூதரக, ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும் வேலையில் சீனா இறங்கியுள்ளது. சீன ஆட்சியை ஏற்கும்படியான நெருக்கடியை, தைவானுக்கு கொடுத்து வருகிறது. ஆனால், அமைதியை விரும்புகிறோம் என கூறி வரும் தைவான் அரசு, தாக்குதல் தொடுக்கப்பட்டால் தற்காப்புக்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்றும் கூறியுள்ளது
தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா கடந்த காலத்தில் வெளிப்படையாக அறிவித்தது. அதற்கேற்ப, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்நாட்டில் வைத்து, தைவானின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்று கூறினார். அப்போது, அவரது பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க விமான படையின் பிரிகேடியர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறும்போது, எங்களது கூட்டணி நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் மற்றும் அமைதியான, சுதந்திர மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதியை பாதுகாப்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது என கூறியுள்ளார்.