பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலால் பறிபோனதா ஒரு உயிர்?
லண்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் உறவினரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் லாகூரிலுள்ள வாடகை வீடு ஒன்றில் தன் தோழியருடன் தங்கியிருந்த Mayra Zulfiqar (26), திங்களன்று இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
Mayraவின் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் உலாவரத்தொடங்கின. அவரை திருமணம் செய்ய இருவர் போட்டி போட்டதாகவும், அதனாலேயே Mayra கொல்லப்பட்டதாகவும் கூட ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
இதற்கிடையில், பிரித்தானிய பிரஜையான Mayra, தன் உறவினரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் வந்தவர், அவரது பெற்றோர் லண்டனுக்குத் திரும்பிவிட்ட நிலையில், Mayra மட்டும் ஏன் லண்டனுக்குத் திரும்பவில்லை என்ற கேள்விக்கான பதிலை அவரது உறவினர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, பாகிஸ்தான் சமீபத்தில் பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அது கொரோனா அபாய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன்பே Mayraவின் பெற்றோர் லண்டன் திரும்ப டிக்கெட் ஏற்பாடு செய்துவிட்டிருக்கிறார்கள். ஆனால், Mayra டிக்கெட் முன் பதிவு செய்வதற்குள் பாகிஸ்தான் பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இப்போது லண்டன் திரும்பினால், 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு 1,750 பவுண்டுகள் செலவிட வேண்டியிருக்கும் என்றும், அவ்வளவு பணம் செலவிட விரும்பாததாலேயே அவர் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், Mayraவை இரண்டு பேர் திருமணம் செய்ய விரும்பியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், ஏற்கனவே Mayraவுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்றும், அவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
மேலும், Mayra பாகிஸ்தான் வந்ததுமே Zahir Jadoon மற்றும் Saad Ameer Butt என்னும் இருவர் அவரை வம்புகிழுத்துள்ளார்கள். அது தொடர்பாக அவரது மாமா ஓருவர் பொலிசில் புகாரளித்துள்ளார்.
ஆனால், பெண்கள் மீதான புகார்களை பொதுவாக அலட்சியம் செய்யும் பொலிசார், Mayra விடயத்திலும் அலட்சியமாக இருக்க, Mayra கொலை செய்யப்பட்டுள்ளார்.
Mayra சட்டக்கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்தவர். விரைவில் சொந்தமாக சட்ட ஆலோசனை அலுவலகம் ஒன்றை நிறுவ விரும்பியுள்ளார். அழகான பெண்ணும் கூட அவர்.
ஆகவே, ஒரு பெண் இப்படி முன்னேறுவதா என்ற வெறுப்பில் கூட அவர்கள் Mayraவைக் கொலை செய்திருக்கலாம் என்கிறார் அவரது உறவினர் ஒருவர். இதற்கிடையில், மகள் கொல்லப்பட்ட தகவல் அறிந்து Mayraவின் பெற்றோர் பதறிப்போய் மீண்டும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்கள்.
உடற்கூறு ஆய்வு மற்றும் பொலிசாரின் விசாரணை முடியும்போதுதான் உண்மையில் Mayraவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவரும்.