பிரதமர் ரிஷி G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா? உண்மை நிலவரம்
G7 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி சென்றுள்ள பிரித்தானிய பிரதமர், மற்ற நாடுகளின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ரிஷிக்கு.
ரிஷி G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா?
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், G7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலிக்கு சென்றுள்ளார்.
ஆனால், அவர் அங்கு முறைப்படி எந்த நாட்டின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
அத்துடன், உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலியின் பிரதமரான ஜியார்ஜியா மெலானியை (Giorgia Meloni) அவர் சந்திக்கும்போது, அவர் ரிஷியிடம், நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என கேட்டதாகவும், ரிஷியிடமிருந்து விலகியதாகவும், வெளியான வீடியோவை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆகவே, ரிஷி, G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்படுகிறாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
என்ன காரணம்?
அதாவது, பிரித்தானியாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில், கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. லேபர் கட்சி பெரும் முன்னேற்றத்தைக் காண, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தில் கூட இல்லாமல், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை காணப்படுகிறது.
ஆகவே, அடுத்த தேர்தல் முடியும்போது ரிஷி பிரித்தானிய பிரதமராக இருக்கமாட்டார் என்றும், அதனால்தான் அவரை மற்ற நாடுகளின் தலைவர்கள் புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.
உண்மை நிலவரம்
பிரித்தானியாவில் ரிஷி கட்சியின் நிலைமை மோசமாக உள்ளது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக அவரை மற்ற நாட்டு தலைவர்கள் யாரும் புறக்கணிக்க முடியாது.
காரணம், மற்ற G7 நாடுகளின் தலைவர்கள் நிலைமை ஒன்றும் ஆஹா ஓஹோவென்று இருப்பதாக கூறமுடியாது.
ஐரோப்பிய தேர்தலில் பிரான்சின் மேக்ரான் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது, ஜேர்மனியின் ஓலாஃப் கட்சியை வலது சாரிக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளியுள்ளன.
அமெரிக்காவிலோ, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடன் கடும் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறார். கனடாவில், பிரதமர் ட்ரூடோவுக்கும், ஜப்பானில், அந்நாட்டின் பிரதமர் Fumio Kishidaவுக்கும் மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது. ஆக, இவர்களுடைய நிலையை பார்க்கும்போது, பிரதமர் ரிஷியை மட்டும் புறக்கணிப்பதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றே கூறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |