தோட்டக் குழாய் பயன்பாட்டுத் தடை... பிரித்தானியாவின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனம் எச்சரிக்கை
Hosepipe ban will last until end of YEAR: குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கை.
பிரித்தானியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டின் இறுதி வரை குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான (hosepipe) கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நாட்டின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆண்டின் இறுதி வரை
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் அவசியமென்றும், இவை பல மாதங்களுக்குத் தொடரக்கூடும் என்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேம்ஸ் வாட்டர் (Thames Water) நிறுவனத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஹோஸ்பைப் பயன்பாட்டுத் தடை கட்டுப்பாடுகள், இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும்.

பிரித்தானியாவில் கோடைக்காலத்தின் ஐந்தாவது வெப்ப அலை முடிவுக்கு வரும் நிலையில், ஆண்டின் மிக வெப்பமான நாளில் லண்டனில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகலில் ஒருவரான நெவில் மன்காஸ்டர் தெரிவிக்கையில், எங்களின் வழக்கமான நீர் விநியோகத்திற்கு மேலதிகமாக, நீருக்கான பெரும் தேவை இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்று கேள்விக்கு பதிலளித்துள்ள மன்காஸ்டர், யதார்த்தமாகப் பார்த்தால், அவை நீக்கப்படுவதற்கு இந்த ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆகலாம் என்று நான் கருதுகிறேன் என்றார்.
நீண்ட கால வெப்பமான மற்றும் வறண்ட கோடைக்காலத்திற்குப் பிறகு, இங்கிலாந்தின் ஏறக்குறைய முக்கால் பகுதியும் வேல்ஸ் முழுவதும் தற்போது வறட்சி நிலையை எதிர்கொண்டுள்ளன.
இந்த வாரத் தொடக்கத்தில், இங்கிலாந்தின் சில முக்கிய நகரங்களில் இடி மற்றும் பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது; சில பகுதிகளில் பல மாதங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவிலான மழை பதிவாகியுள்ளது.
1,000 பவுண்டுகள்
தேம்ஸ் வாட்டர் நிறுவனம் ஜூலை மாத இறுதியில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது அந்நிறுவனத்தின் குடிநீர் வாடிக்கையாளர்களில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அத்தடையின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய மாதங்களில் மேலும் ஒன்பது நீர் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன; இத்தடை உத்தரவுகள் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியையும் வேல்ஸின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளன.

மிக சமீபத்தில், வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதித்தது. இதன் மூலம், 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தக் கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் அமுல்படுத்தியுள்ளது.
தற்காலிக பயன்பாட்டுத் தடையின் கீழ், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது அல்லது வெந்நீர்த் தொட்டிகளை நிரப்புவது போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு நீர்க்குழாய்கள், தெளிப்பான்கள் மற்றும் அழுத்தக் கழுவிகளைப் பயன்படுத்தக் கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட விதிவிலக்கு அல்லது சட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு இடைவெளி (loophole) பொருந்தாத பட்சத்தில், விதிகளை மீறுபவர்கள் 1,000 பவுண்டுகள் அபராதத்தைச் சந்திக்க நேரிடலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |