கொரோனா தொற்றே இல்லை என்ற நிலைமை வரவே வராது: மிக துல்லியமாக கொரோனா மரணங்களை கணிக்கும் ஒரே அறிவியலாளர் பரபரப்பு தகவல்
கொரோனா தொற்றே இல்லை என்ற நிலைமை வரவே வராது என்கிறார் கொரோனா தொற்றையும் மரணங்களையும் மிக துல்லியமாக கணிக்கக்கூடிய ஒரே அறிவியலாளரான ஒரு பிரித்தானியர்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் Philip Thomas என்பவர் மட்டுமே, கொரோனா தொற்று மற்றும் மரணங்களை மிக துல்லியமாக கணித்துள்ளார்.
அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவான Sage, ஆகத்து மாதம் துவங்கும்போது, நாளொன்றிற்கு 100,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகும் என்றும், பேராசிரியர் Neil Ferguson, நாளொன்றிற்கு 200,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகும் என்றும் கணித்திருந்தனர்.
ஆனால், அவர்களுடைய கணிப்புக்கு மாறாக, நேற்று 25,000 பேரை விட குறைவானவர்களுக்கே புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.இது அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் கணிப்பில் கால் வாசி கூட இல்லை.
ஆக, அவர்களுடைய கணிப்பு துல்லியமாக இல்லை எனலாம். ஆனால், பேராசிரியர் Philip Thomas இதுவரை கணித்தவை எல்லாம் துல்லியமாகவே இருந்துள்ளன.
நாட்டின் மக்கள்தொகை, கொரோனா தொற்றிய ஒருவர் மற்றொருவருக்கு தொற்றை பரப்ப எடுத்துக்கொள்ளும் சராசரி நேரம் மற்றும் கொரோனா தொற்றிய ஒருவர் எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்புகிறார் ஆகியவற்றின் அடிப்படையில் தனது கணிப்பை மேற்கொள்கிறார் பேராசிரியர் Philip Thomas.
அதன்படி, இந்த கோடையில் பிரித்தானியாவில் ஏராளமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும், ஆனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு கொரோனா அலைகளில் இருந்ததைவிட குறைவாகவே இருக்கும் என அறிவியல் முறையில் கணித்திருந்தார் Thomas.
அதேதான் இப்போது நடந்துள்ளது. ஆக, அவரது கணிப்பு இதுவரை துல்லியமாகவே இருந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவர் சில விடயங்களை கணித்துள்ளார்.
அதன்படி, கொரோனா இன்னமும் முடியவில்லை என்று கூறும் Thomas, மூன்றாவது அலையில் தொடர்ந்து கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என்கிறார். சுமார் 2 மில்லியன் மக்கள் கூட பாதிக்கப்படலாம் என்றாலும், அதைக் குறித்து திகிலடையவேண்டாம் என்கிறார் அவர்.
மிகப்பெரிய அளவில் பிரித்தானியாவின் தடுப்பூசி திட்டம் வெற்றிபெற்றுள்ளதைத் தொடர்ந்து முதல் இரண்டு அலைகளைவிட மூன்றாவது அலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று கூறும் Thomas, பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர், குறிப்பாக ஆரோக்கியமானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தங்களுக்கு கொரோனா வந்து சென்றதே அவர்களுக்கு தெரியாத அளவுக்கே கொரோனாவின் தீவிரம் இருக்கும் என்கிறார்.
ஆனால், இவை எல்லாவற்றையும் வைத்து பார்த்துவிட்டு, கொரோனா கிட்டத்தட்ட இங்கிலாந்திலிருந்தே வெளியேறிவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது என எச்சரிக்கிறார் பேராசிரியர் Thomas.
அதாவது, மொத்தமாக கொரோனாவை ஒழிக்கவே முடியாது என்று கூறும் Thomas, ‘Zero Covid’ அதாவது கொரோனாவே இல்லை என்ற நிலைமை கற்பனையில் வேண்டுமானால் சாத்தியம் என்கிறார்.
ஆனாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, கொரோனா தொற்று முடிவுக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்கிறார் அவர்.