ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல்
ஜேர்மன் கடற்கரை ஒன்றில் சிக்கியிருந்த திமிங்கலம் ஜேர்மன் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டதுபோல் உள்ளது.
கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்

மார்ச் மாதம், ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை மக்கள் கவனித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதன் உடலில் சுற்றியிருந்த வலையை அறுத்தெறிந்தனர்.
பின் மெல்ல அதன் தலைப்பகுதியை கடலை நோக்கித் திருப்பி, அது எப்படியாவது கடலை நோக்கி நீந்திச் சென்றுவிடுமா என அவர்கள் காத்திருக்க, அந்த திமிங்கலமோ மீண்டும் கரையைப் பார்த்து திரும்பியது.

32 அடி நீளமுடைய, பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த திமிங்கலத்தை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாது, ஏனென்றால், அப்படிச் செய்வது அதற்கு காயத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், மீட்புக் குழுவினர், அந்த திமிங்கலத்தின் அருகில் வேகமாக படகுகளை செலுத்துவதன் மூலம் அலைகளை உருவாக்குவது முதலான பல்வேறு விடயங்கள் மூலம் அதை கடலுக்குள் திருப்பி அனுப்ப முயன்றுவந்தார்கள்.
ஆனால், அதனால் பலன் எதுவும் கிடைக்காததால் மீட்புக்குழுவினர் கவலையடைந்தார்கள்.

இந்நிலையில், பெரிய இயந்திரங்கள் மூலம், கடற்கரையிலிருந்து கடலுக்குள் செல்லும் ஒரு வாய்க்காலை உருவாக்கினார்கள் மீட்புக் குழுவினர்.
அதைத் தொடர்ந்து, ஆச்சரியமளிக்கும் வகையில், அந்த திமிங்கலம் மெல்ல அந்த வாய்க்கால் வழியாக நகரத் துவங்கியது, பின்னர் அது Lübeck வளைகுடா பகுதியில் நீந்திக்கொண்டிருந்தது தெரியவந்தது.
ஆனால், மீண்டும் அந்த திமிங்கலம் Wismar என்னும் நகருக்கருகே ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டது.
ஜேர்மானியர்கள் காட்டும் ஆர்வம்

விடயம் என்னவென்றால், அந்த திமிங்கலம் ஜேர்மன் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டதுபோல் உள்ளது.
ஆம், ஜேர்மன் ஊடகங்கள் அதற்கு டிம்மி என பெயர் வைக்க, அதை எப்படியாவது கடலின் ஆழமான பகுதிக்குள் அனுப்பிவிட ஏராளமானோர் முயன்று வருகிறார்கள்.

இரண்டு பெரும் ஜேர்மன் கோடீஸ்வரர்கள் அந்த திமிங்கலத்தை கடலுக்குள் அனுப்பும் முயற்சிக்கான பணத்தை வழங்கிவருகிறார்கள்.
இந்நிலையில், barge என்னும் ஒரு பெரிய தட்டையான படகில் நீர் நிரப்பி, அதன் மூலம் டிம்மி திமிங்கலத்தை கடலின் ஆழமான பகுதிக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இந்த முயற்சி வெற்றி பெறுமானால், அந்த திமிங்கலம் இன்று வடகடலுக்குச் சென்றுவிடும் என்று கூறியுள்ளார் Mecklenburg-Western Pomerania மாகாண சுற்றுச்சூழல் அமைச்சரான Till Backhaus.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |