அவர் இருக்க டோனி எப்படி வழிகாட்டியாக முடியும்? கேள்வி எழுப்பும் அஜய் ஜடேஜா
டி20 கிரிக்கெட் உலக கிண்ணம் 2021 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக டோனி நியமிக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டோனியின் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அஜய் ஜடேஜா.
கடந்த 9ம் திகதி இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 உலக கிண்ணம் தொடருக்கான அணியை அறிவித்தது. அதில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளரின் விவரங்கள் இடம் பெற்றிருந்ததுடன் அணியின் வழிகாட்டியாக டோனி நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள அஜய் ஜடேஜா, எனக்கு டோனியின் நியமனம் வியப்பாக இருந்தது. நான் டோனியின் தீவிர ரசிகன். தனது ஓய்வுக்கு முன்னதாகவே அடுத்த அணித் தலைவரை உருவாக்கி கொடுத்த கேப்டன் அவர்.
ஆனால், இந்தியாவை கிரிக்கெட் உலகின் நம்பர் 1 அணியாக மாற்றிய பயிற்சியாளர் இருக்கையில் அணியை வழிநடத்த வழிகாட்டி ஏன் என்ற கேள்வி எழுகிறது.
ஒரே நாள் இரவில் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது என்றார் அஜய் ஜடேஜா.