இலவச அழகியல் சிகிச்சைக்கு ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
தான் புதிய வாழ்வொன்றைத் துவக்குவதற்காக, தன்னைப்போலவே காணப்பட்ட அழகிய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார் ஜேர்மானிய இளம்பெண் ஒருவர்.
காரில் கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்
கடந்த ஆகத்து மாதம், தெற்கு ஜேர்மனியில் கார் ஒன்றில் அழகிய இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஷாராபான் (Sharaban K, 23) என்னும் பெண்ணுடைய உடல் என அவரது பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டது.
உடற்கூறு ஆய்வில் ஏற்பட்ட சந்தேகம்
Ingolstadt என்ற இடத்தில், மெர்சிடிஸ் காரில் கண்டுபிடிக்கப்பட்ட ஷாராபான் என்னும் அந்தப் பெண் ஈராக் நாட்டவர் ஆவார். அவர் Munich நகரில் வாழ்ந்துவந்தார்.
மகள் எதனால் கொல்லப்பட்டார் என பெற்றோர் திகைத்துப்போயிருக்க, உடற்கூறு ஆய்வு சில அதிர்ச்சியளிக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தியது. இறந்த பெண்ணின் உடலில் குத்தப்பட்டிருந்த டாட்டூக்கள் சந்தேகத்தை உருவாக்கின.
கடைசியில், அந்த உடல் ஷாராபானுடையதே அல்ல. அது, கதீஜா (Khadidja O, 23) என்னும் அழகுக்கலை நிபுணருடைய உடல் என்பது தெரியவந்தது. அல்ஜீரியா நாட்டு இளம்பெண்ணான கதீஜா, Heilbronn என்ற இடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.
விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்
பொலிசாரின் தீவிர விசாரணையில், கொல்லப்பட்டது கதீஜா என்னும் பெண் என்றும், ஷாராபான் உயிருடன் இருக்கிறார், கதீஜாவைக் கொன்றதே ஷாராபான்தான் என்பதும் தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, பவேரிய பொலிசாரால் Sheqir K (23) என்பவரும், ஷாராபானும் கைது செய்யப்பட்டார்கள். தொடர் விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாக தலைமறைவாக விரும்பிய ஷாராபான், தன்னைப் போலவே காணப்படும் வேறொரு இளம்பெண்ணைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட திட்டமிட்டது தெரியவந்தது.
இலவச அழகியல் சிகிச்சைக்கு ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
இன்ஸ்டாகிராமில், அழகியல் சிகிச்சை ஒன்றை இலவசமாக செய்வதாக ஆசை காட்டி, தன்னைப்போலவே காணப்படும் பல இளம்பெண்களை தொடர்புகொண்டுள்ளார் ஷாராபான்.
அழகியல் சிகிச்சைக்கு ஆசைப்பட்ட கதீஜா, ஷாராபானைச் சந்திக்க சம்மதம் தெரிவிக்க, அவரை காரில் ஏற்றிக்கொண்டு மரங்கள் அடர்ந்த ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்து, முகத்தை அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைத்து Sheqirம், ஷாராபானும் அவரது உடலை ஷாராபானின் காரின் பின் இருக்கையில் வைத்து, காரைக் கொண்டு ஆளரவமற்ற ஒரு இடத்தில் விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டிருக்கிறார்கள்.
வித்தியாசமான இந்த வழக்கு ஜேர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், தற்போது ஷாராபான் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. Sheqir, ஷாராபான் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |