ட்ரம்ப் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளாரா? 25 சட்டத்திருத்தம் சொல்வது என்ன?
25 சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி ட்ரம்ப்பை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை வலுத்துள்ளது.
ட்ரம்ப்பிற்கு அமெரிக்காவில் வலுக்கும் எதிர்ப்பு
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால் இது இஸ்ரேலினுடைய போர் இதில் அமெரிக்கா கலந்து கொள்ளக்கூடாது என அமெரிக்காவில் இந்த போருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹார்மோஸ் நீரிணையை ஈரான் திறக்க ட்ரம்ப் விதித்த கெடு நாளை முடிவடையும் நிலையில், ஈரானுக்கு வெளியிட்ட எச்சரிக்கை பதிவில், ஈரான் குறித்து சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த பதிவிற்கு அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், 25வது திருத்தத்தை பயன்படுத்தி டிரம்ப்பை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க வேண்டுமென அமெரிக்காவின் அதிகார மட்டத்தில் இருந்தே குரல் எழுந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் கிறிஸ் மர்ஃபி, டிரம்பின் பதிவை "முற்றிலும், முழுமையாகவே கட்டுப்பாடற்றது" என்று வர்ணித்ததோடு, 25வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அமைச்சரவையை வலியுறுத்தினார்.
"நான் டிரம்ப்பின் அமைச்சரவையில் இருந்திருந்தால், ஈஸ்டர் பண்டிகையின் போது 25வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்களுடன் பேசியிருப்பேன். ஏனெனில் டிரம்ப் செய்வது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது" என தெரிவித்துள்ளார்.
25வது சட்டத்திருத்தம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஜனாதிபதி பதவிப் பரிமாற்றம் மற்றும் இயலாமை தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் வகையில், 1967 ஆம் ஆண்டு 25வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி இறந்தாலோ, பதவி விலகினாலோ, அல்லது பதவி நீக்கத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டாலோ , துணை ஜனாதிபதி ஜனாதிபதிக்கு அதிகாரத்தை மாற்றுவதை இந்த சட்டத்திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது.
இதில் 4வது பிரிவு, ஜனாதிபதியால் தனது கடமைகளை செய்ய முடியவில்லை என எழுத்துப்பூர்வமாக செனட்டின் தற்காலிகத் தலைவருக்கும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருக்கும் அறிவிக்க, துணை ஜனாதிபதிக்கும் அமைச்சரவையின் பெரும்பான்மையினருக்கும் அதிகாரம் வழங்குகிறது.
இவ்வாறு நடக்கும் போது துணை ஜனாதிபதி உடனடியாக தற்காலிக பொறுப்பு ஜனாதிபதியாக பதவியேற்பார்.
ஜனாதிபதி, தாம் மீண்டும் பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறி, காங்கிரசுக்குத் தனது சொந்த அறிக்கையை அனுப்புவதன் மூலம் இதை எதிர்க்கலாம்.
ஜனாதிபதி இதை எதிர்த்தால், 21 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முடிவெடுக்க வேண்டும்.

துணை ஜனாதிபதி தற்காலிக ஜனாதிபதியாக தொடர்வதற்கு பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஜனாதிபதி மீண்டும் பதவியேற்பார்.
ட்ரம்ப் ஈரான் போர் விவகாரத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை கூறி வரும் நிலையில் அவர் சரியான மனநிலையில் உள்ளாரா என அமெரிக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஹார்மோஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது, ஈரான் போரில் வான்பரப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என பல மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், ஈரான் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருவதோடு, அமெரிக்க போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த செயல், உலகிற்கு அச்சுறுத்தலாக மாறி வருவதால் 25வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |