ஜேர்மனியில் இரட்டைக் குடியுரிமைக்கு எப்போது அனுமதி கிடைக்கும்?
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களும், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களும், எப்போது ஜேர்மன் அரசு குடியுரிமை விதிகளைநெகிழ்த்தும் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.
ஜேர்மனியில் 2021இல் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விடயங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தன.
இருந்தும், பருவநிலை, போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி போன்ற முக்கியமான விடயங்கள் முன் இந்த இரட்டைக் குடியுரிமை விவகாரம் காணாமல்போய்விடுமோ என்ற எண்ணம் உருவாகியது.
ஆனால், பல்வேறு முக்கிய விடயங்களுக்கு மத்தியிலும், குடியுரிமை தொடர்பான விடயங்களை மறந்துவிடவில்லை என்பதை புதிய கூட்டணி உறுதி செய்தது.
கூட்டணியின் இறுதி சட்ட வரைவில், நவநாகரீக புலம்பெயர்தல் முறை மற்றும் குடியுரிமைக் கொள்கை குறித்து தெளிவாக குறிப்பிட கூட்டணிக் கட்சியினர் மறக்கவில்லை.
கூட்டணி, வெளிநாட்டவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கும் முறைமையை எளிதாகவும், வேகமாகவும் ஆக்கப்போவதாக தெரிவித்திருந்தது. அதாவது முன்பிருந்த நிலை மாறி எட்டு ஆண்டுகளுக்குப் பதிலாக இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தபின் ஜேர்மன் குடியுரிமை பெறலாம் என்றும், சில விதிவிலக்குகளின்படி மூன்று ஆண்டுகளில்கூட ஜேர்மன் குடியுரிமை பெறலாம் என்றும் கூட்டணி தெரிவித்திருந்தது.
புதிய அரசின் விதிமாற்றங்களின்படி,ஜேர்மனியில் பிறந்த பிள்ளைகளும்,முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோரும் ஜேர்மன் குடியுரிமை பெற்றாலும், தங்கள் முந்தைய குடியுரிமையையும் தக்கவைத்துக்கொள்ளலாம்.
இந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்?
கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சியினருமே இந்த கேள்விக்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், விரைவில் இந்த மாற்றத்தை, முதல் பெரிய திட்டங்களில் ஒன்றாக நாடாளுமன்றத்தின் முன் கொண்டு செல்ல இருப்பதாக மூன்று கட்சியினருமே தெரிவித்துள்ளார்கள்.
கூட்டணி அரசு என்ன வாக்குறுதி அளித்திருந்தது?
ஜேர்மனியில் பிறந்த குழந்தைகள், அவர்களது பெற்றோரில் ஒருவராவது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கும்பட்சத்தில், அந்த குழந்தைகளுக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்படும்.
இதுவரை, ஜேர்மானியர்கள் அல்லாதவர்கள் ஜேர்மானியர் ஒருவரை திருமணம் செய்திராத பட்சத்தில், அவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கவேண்டுமானால், தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சட்டப்படி ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற நிலை இருந்த நிலையில், இனி ஒருங்கிணைப்பு வகுப்புகள் (integration course) முடித்திருந்தால் ஏழு ஆண்டுகளாகவும், ஜேர்மன் மொழித்திறனில் level B1க்கு அதிகமாக பெற்றிருந்தால், ஆறு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட உள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஜேர்மனியை மீண்டும் கட்டி எழுப்ப உதவியாக இருந்தவர்களான, Guest-worker generation என்ற வகைப்பிரிவினர் ஜேர்மன் குடியுரிமை பெறும் நடைமுறையை எளிதாக்கும் திட்டம் ஒன்று உள்ளது ஆகிய திட்டங்களை கூட்டணி அரசு அறிவித்திருந்தது.
புதிய விதிமாற்றங்களின்படி, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றாலும், தங்கள் முந்தைய குடியுரிமையையும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற பல திட்டங்கள் குறித்து புதிய கூட்டணி அரசு அறிவித்திருந்த நிலையில், அவற்றை அமுல்முறைப்படுத்துவதில் நடைமுறை பிரச்சினைகள் சில உள்ளன என்றாலும், தங்கள் ஆட்சிக்காலத்துக்குள் அவற்றை நிறைவேற்ற புதிய கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது.