ஜேர்மனியில் பொதுமுடக்கம் எப்போது?: முடிவெடுப்பது தொடர்பில் இன்று உச்சி மாநாடு
ஜேர்மனியில் வேகமாக பரவி வரும் Omicron வைரஸ் காரணமாக, பகுதி பொதுமுடக்கம் அறிவிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படலாம் என சுகாதாரத்துறை நிபுணர்களும் அரசியல்வாதிகளும் நம்பும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
மற்ற நாடுகளைக் காட்டிலும் மெதுவாகவே ஜேர்மனியில் Omicron வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது என்றாலும், இந்நிலை சீக்கிரத்தில் மாறிவிடலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Robert Koch நிறுவன தரவுகளின்படி, ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை 315.4 ஆக இருந்தது, திங்களன்று 316 ஆக உயர்ந்துள்ளது.
முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், Omicron வகை கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அது மேலும் வேகமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 21ஆம் திகதி, பெடரல் மற்றும் மாகாண அரசுகள் கூடி, கொரோனா சூழல் மற்றும் Omicron பரவினால் எடுக்கவேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக உச்சி மாநாடு ஒன்றை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில்தான் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் அறிவியல் ஆலோசனைக்குழுவின் அறிவியலாளர்கள், பூஸ்டர் தடுப்பூசிகள் மட்டுமே Omicron அலையைத் தடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என்றும், மக்கள் தொடர்பு கட்டுப்பாடுகள் அவசியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன், அதாவது டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படாது என்றே நம்பப்படுகிறது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach, நெதர்லாந்து நாட்டைப் போல, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன், நம் நாட்டில் பொதுமுடக்கம் இருக்காது என்றார்.
கிரீன்ஸ் கட்சி சுகாதாரத்துறை அரசியல்வாதியான Janosch Dahmenம், Omicron வைரஸின் பயங்கர பரவும் தன்மை காரணமாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின் ஒரு பொதுமுடக்கத்தை நம்மால் தவிர்க்க முடியாது என்றும், ஒரு வேளை, ஜனவரி மாத துவக்கத்தில் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற அரசியல்வாதிகளும் இதே கருத்தையே தெரிவித்துள்ள நிலையில், ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பொதுமுடக்கம் இருக்காது என்றும், ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தபின் பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கலாம்.