41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியர் - யார் இந்த சுபான்ஷு சுக்லா? என்ன திட்டம்?
41 ஆண்டுகளுக்கு பிறகு சுபான்ஷு சுக்லா என்னும் இந்தியர் நாளை விண்வெளிக்கு புறப்பட உள்ளார்.
ஆக்சிம் 4 விண்வெளி பயணம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
2027 ஆம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டம் மூலம் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முனைப்பு காட்டி வருகிறது.
இதற்கான முன்னோட்டமாக சுபான்ஷு சுக்லா(shubhanshu shukla) என்னும் இந்தியர் ஒருவரை, ஆக்சிம் 4 (Axiom-4) திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்புகிறது இஸ்ரோ.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனம் மூலம் இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சுக்லாவுடன் அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்க இருக்கின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் 'டிராகன்' விண்கலத்தில் பயணிக்க உள்ளனர்.
இந்திய நேரப்படி நாளை மாலை 5.52 மணிக்கு புறப்பட்டு, 28 மணி நேர பயணத்திற்கு பின்னர் ஜூன் 11 ஆம் திகதி இரவு 10 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைய உள்ளனர்.
சுபான்ஷு சுக்லா
முன்னதாக, 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு பயணம் செய்தார்.
தற்போது 41 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்ல உள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். இந்த திட்டத்திற்க்கு இஸ்ரோ ரூ.550 கோடி செலவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி பிறந்தவர் சுபான்ஷு சுக்லா.
2006 ஆம் ஆண்டு இந்திய விமான படையில் விமானியாக சேர்ந்த இவர், ஏன்-32, டார்னியர், ஹாக், ஜாக்குவார், மிக்-21, மிக்-29 மற்றும் சுகோய் போர் விமானங்களில் 2000 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார்.
விண்வெளியில் ஆய்வுகள்
14 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்க உள்ள சுக்லா, நாசாவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட பிரத்யேக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சோதனைகளை விண்வெளியில் மேற்கொள்ள உள்ளார்.
குறிப்பாக, இஸ்ரோவின் 7 சோதனைகளிலும், நாஸாவின் மனித ஆராய்ச்சி திட்டத்துக்கான 5 கூட்டு ஆய்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
புவியீர்ப்பு சக்தி குறைவாக உள்ள விண்வெளிச் சூழலில் பச்சைப்பயிறு, வெந்தயம் ஆகிய விதைகளை வளர்த்து சுக்லா ஆய்வு மேற்கொள்கிறார்.
நுண் ஈர்ப்பு விசையில் எலும்பு தசை செயலிழப்புக்கு வழிவகுக்கும் பாதைகளை அடையாளம் காண்பதிலும், இந்த சிக்கலை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான சிகிச்சை உத்திகளை ஆராய்வதிலும் கவனம் செலுத்த உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |