இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகமாகும் உயிரிழப்புகள்... கொரோனா தீவிரமானது எப்படி? WHO கொடுத்த விளக்கம்
இந்தியாவில் கொரோனாவால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து உலகசுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைத்த கொரோனா, இப்போது இந்தியாவை உலுக்கி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
குறிப்பாக இந்திய வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகர் இந்தியாவில் ஆக்ஸிஜன் இல்லாமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்காக 4 ஆயிரம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை உலக சுகாதார மையம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார மையத்தின் செய்தித் தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படுவதாகவும், அதற்கும் குறைவானவர்களுக்கே ஆக்ஸிஜன் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தொற்று ஏற்பட்ட அனைவரும் மருத்துவமனைக்குச் செல்வதால் குழப்பம் ஏற்படுவதாகவும் தரிக் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகமான மக்கள் கூட்டம், அதிகரிக்கும் தொற்று, குறைவான தடுப்பூசி போன்றவை காரணமாக இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.